பக்கம் எண் :

204சித்தர் பாடல்கள்

காயக் குடத்திலே நின்ற பாம்பைக்
   கருணைக் கடலிலே தியங்க விட்டு
நேயச் சுழுமுனை நீடு பாய்ச்சி
   நித்யமான வஸ்துவை நிலைக்க நாடி
மாயப் பெருவெளி தன்னி லேறி
   மாசற்ற பொருளினை வாய்க்கத் தேடி
ஆயத் துறைகடந் தப்பாற் பாழின்
   ஆனந்தஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே.
118
  
மூலத் தலத்திலே நின்ற கருத்தை
   முற்றுஞ் சுழுமுனை தன்னி லூடே
மேலத் தலத்திலே விந்து வட்டம்
   வேலை வழியிலே மேவி வாழும்
பாலத் திருத்தாய்க் கருணை யதனால்
   பரகதி ஞானசொ ரூபமாகி
ஆலச் சயனத்து மாலுட னின்றே
   ஆனந்தஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே.
119
  
புலனைந்து வீதியில் வையாளி பாயும்
   புரவி யெனுமனதை ஒருமைப் படுத்தி
மலபுந்த வுலகங் கடந்த தாலே
   மன்னுகுரு பாதத்தி னிலையை நாடித்
தலமைந்து பூலோகங் கடந்த தாலே
   சந்திர மண்டலமுங் கடந்த தாகும்
அலமந்து பூலோகக் கடலை நீக்கி
   ஆனந்த மாகிநின் றாடாய் பாம்பே.
120
  
குருவென்னும் ஆசானி னுருவெ டுத்துக்
   குறியான ஞானந்துப் பாக்கியாக்கி
அருளென்னும் அருளையே உண்டை யாக்கி
   ஆனந்த மாகவே அதைக்க டந்தே
மருளென்னு மாதர்மன நெறியைத் தொட்டு
   வாங்காம லெரிந்திட நெட்டை யிட்டு
பருவளைக் குள்ளேயே பட்ட தென்றே
   பற்றானைப் பற்றிநின் றாடாய் பாம்பே.
121