பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்205


கன்னான் குகையிலே கான்ம றிப்போம்
   கருமா னுலையிலே தீயை மூட்டுவோம்
சொன்னார் தலையிலே பொன்னை யாக்குவோம்
   கருதி யருகல்வி ஒப்பஞ் செய்வோம்
மின்னார்கள் பாசத்தை விட்டே யெரிப்போம்
   மெய்ப்பொருட் குறிகண்டு விருப்பை யடைவோம்
பன்னாதே பன்னாதே சும்மா விருந்து
   பராபரஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே.
122
  
சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்
   சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்
வீதிப் பிரிவினிலே விளையா டிடுவோம்
   வேண்டாத மனையினி லுறவு செய்வோம்
சோதித் துலாவியே தூங்கி விடுவோம்
   சுகமான பெண்ணையே சுகித்தி ருப்போம்
ஆதிப் பிர்மர்கள் ஐந்து பேரும்
   அறியார்கள் இதையென் றாடாய் பாம்பே.
123
  
நெட்டெழுத் ததனிலே நிலைபி டித்து
   நீங்கா வெழுத்திலே வாலை முறுக்கி
விட்டவ் வெழுத்திலே படம்வி ரித்து
   விண்ணின் வழியிலே மேவி யாடிப்
பட்ட வெழுத்தையும் பதிந்தி ருப்போம்
   பன்னிரண் டாமெழுத்தினிற் பன்னிக் கூடித்
திட்டமுட னெமக்கருள் தேசிக னார்தம்
   சீர்பாதஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே.
124
  
ஊசித்துளைக் குடத்தினிற் பாம்பை யடைப்போம்
   உலகெலாஞ் சுற்றி யுலாவிவருவோம்
மாசுள்ள பிறவியை மறந்தி ருப்போம்
   மனமொத்த வெளியிலே விட்டே யாட்டுவோம்
மாசுப் புலன்களை இரைகொ டுப்போம்
   மனமுற்ற உச்சியிலேறி யாடுவோம்
பேசு மெழுத்தையும் விழுங்கி விடுவோம்
   பிறப்பிறப் பற்றோமென் றாடாய் பாம்பே.
125