பக்கம் எண் :

206சித்தர் பாடல்கள்

ஆணிக் குடத்திலே பாம்ப டைப்போம்
   அக்கினிக் கோட்டைமே லேறிப் பார்ப்போம்
மாணிக்கத் தூணின்மேல் விட்டே யாட்டுவோம்
   மனம்வாக்குக் காயத்தை யிரைகொ டுப்போம்
நாணிக் கயிற்றையும் அறுத்து விடுவோம்
   நமனற்ற நாதன்பதம் நாடியே நிற்போம்
ஏணிப் படிவழிகண் டேறி விடுவோம்
   யாருமிதை அறியாரென் றாடாய் பாம்பே.
126
  
வடக்குங் கிழக்குமாக நூலை யிழைப்போம்
   மற்றுஞ் சுழலிலே பாவு பூட்டுவோம்
நடக்கும் வழியினிலே யுண்டைசேர்ப்போம்
   நடவா வழியினிலே புடவை நெய்வோம்
குடக்குக் கரையினிலே கோலைப் போடுவோம்
   கொய்ததை எங்குமே விற்று விடுவோம்
அடக்கியே யேகத்துளே வைக்கவும் வல்லோம்
   ஆதிபதங் கண்டோமென் றாடாய் பாம்பே.
127
  
சூத்திரக் குடத்திலே பாம்பை யடைப்போம்
   சுழுமுனைக் குள்ளேயோ சுகித்தி ருப்போம்
பாத்திரங் கொண்டுமே பலியி ரப்போம்
   பத்தெட்டு மூன்று படிகட ந்தோம்
ஊத்தைச் சடலத்தினைப் புடமே யிடுவோம்
   உளவ னெமக்குநல் லுறுதி சொல்லப்
பார்த்துரை யிதன்மெய் பலிக்க வெண்ணிப்
   பதனம் பதனமென் றாடாய் பாம்பே.
128
  
மவ்வக் குடத்திலே பாம்ப டைப்போம்
   மணிவட்ட வாசியை வாரி யுண்டோம்
வவ்வக் குடங்களைத் தள்ளி விடுவோம்
   வக்கிர சொர்ப்பனந் தாண்டி விடுவோம்
பவ்வ வெளியிலே விட்டே வாட்டுவோம்
   பஞ்ச கருவியைப் பலிகொ டுப்போம்
சிவ்வுரு வாகியே நின்றோ மென்றே
   சீர்பாதங் கண்டுதெளிந் தாடாய் பாம்பே.
129