இவைகள் இடைக்காடரைப் பற்றி வழங்கும் கதைகள். இவரது சித்தர் பாடல் தொகுப்பில் 30 கண்ணிகள் காணப்படுகின்றன. தாண்டவக் கோனார் கூற்றாக இவர் பாடும் கோனார் பாட்டுக்கள் ஆழ்ந்த தத்துவத்தைப் புலப்படுத்துகின்றன. முதலில் தாண்டவராயக் கோனார் கூற்றாக, எல்லா உலகமும் எல்லா உயிர்களும் எல்லாப் பொருள்களும் எண்ணரிய வல்லாளன் ஆதிபரம சிவனது சொல்லால் ஆகுமே கோனாரே என்று கூறும் இடைக்காடர் அடுத்த நாராயணக் கோனார் கூற்றாக, ஆயிரத்தெட்டு வட்டமுங் கண்டேன் அந்த வட்டத்துள்ளே நின்றதுங் கண்டேன் மாயிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன் மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன் என்று தன் மனநிலையைக் கூறுகின்றார். தாந்தி மித்திமி தந்தக் கோனரே! தீந்தி மித்திமி திந்தக் கோனாரே! ஆனந்தக் கோணாரே! - அருள் ஆனந்தக் கோணாரே என்று இவர் ஆடும் ஆனந்தக்கூத்தும் மனக்கண்ணில் நிழலாடுகின்றது. ஆதி பகவனையே அன்பாய் நினைப்பாயேல் சோதி பரகதிதான் சொந்தமது ஆகாதோ? என்று நம்மைக் கேட்கும் கேள்வியில் வள்ளுவரின் ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ குறளின் நிழலாட்டம் தெரிகின்றது. |