பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்255


காணக்கிடையாத கற்பாந்த கல்பத்தை
     நாணாமல் ஏத்தடியே குதம்பாய்
     நாணமற் ஏத்தடியே.
18
  
அணுவாய் பல்அண்டமாய் ஆனசிற்சோதியைத்
     துணிவாய்நீ போற்றடியோ குதம்பாய்
     துணிவாய்நீ போற்றடியோ.
19
  
மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்குக்
     காணிக்கை நன்மனமே குதம்பாய்
     காணிக்கை நன்மனமே.
20
  
              கடவுள் வல்லபங்கூறல்

தேவருஞ் சித்தருந் தேடு முதல்வர்
     மூவரும் ஆவாரடி குதம்பாய்
     மூவரும் ஆவாரடி.
21
  
சத்தாகிச் சித்தாகித் தாபர சங்கமாய்
     வித்தாகும் வத்துவடி குதம்பாய்
     வித்தாகும் வத்துவடி.
22
  
உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகித்
     திருவாகி நின்றது காண் குதம்பாய்
     திருவாகி நின்றது காண்.
23
  
நீரும் நெருப்பும் நெடுங்காற்று வானமும்
     பாருமாய் நின்றதைக் காண் குதம்பாய்
     பாருமாய் நின்றதைக் காண்.
24
  
புவனம் எல்லாங் கணப்போதே அழித்திடச்
     சிவனாலே ஆகுமடி குதம்பாய்
     சிவனாலே ஆகுமடி.
25
  
அவன் அசையாவிடின் அணுஅசை யாதுஎன்றல்
     புவனத்தில் உண்மையடி குதம்பாய்
     புவனத்தில் உண்மையடி.
26