“கள்ள வேடம் புனையாதே” “கொள்ளைக் கொள்ள நினையாதே” என்று செய்யக்கூடாதவற்றையெல்லாம் பட்டியலிடுகின்றார். அப்படி இவையெல்லாம் செய்யக்கூடாதது என்றால் செய்யக்கூடியதுதான் என்ன என்று கேட்பவருக்கு மீண்டும் ஒரு பட்டியலை நீட்டுகின்றார்.“நல்ல வழிதனை நாடு” “எந்த நாளும் பரமனை நத்தி தேடு” “வல்லவர் கூட்டத்திற்கூடு” “வேத விதிப்படி நில்லு” “நல்லோர் மேவும் வழியினை வேண்டியே செல்லு” “சாதக நிலைமையையே சொல்லு” “பொல்லாத சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு” “மெய்ஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த வேதாந்த வெட்டவெளிதனை தேடு” மனித வாழ்க்கை நிலையில்லாதது என்பதை ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ பாடல் மூலம் குறிப்பாகச் சொன்ன கடுவெளிச் சித்தர் அந்தக் குறிப்பைப் புரிந்துகொள்ளாத பக்குவமில்லாத பாமரர்களுக்குப் புரியும்வண்ணம் அதே கருத்தமைந்த மற்றொரு பாடலையும் பாடுகின்றார். “நீர்மேற் குமிழியிக் காயம் - இது நில்லாது போய்விடும் நீயறி மாயம் பார்மீதின் மெத்தவும் நேயம் - சற்றும் பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்” |