அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில் திருவிளையா டற்கண்டு தெரிசிப்ப தெக்காலம். | 198 |
| |
மீனைமிக வுண்டு நக்கி விக்கிநின்ற கொக்கதுபோல் தேனைமிக வுண்டு தெவிட்டிநிற்ப தெக்காலம். | 199 |
| |
பொல்லாத காயமதைப் போட்டு விடுக்குமுன்னே கல்லாவின் பால்கறப்பக் கற்பதினி யெக்காலம். | 200 |
| |
வெட்டவெளிக் குள்ளே விளங்குஞ் சதாசிவத்தைக் கிட்டிவரத் தேடிக் கிருபை செய்வ தெக்காலம். | 201 |
| |
பேரறிவி லேமனதை பேசாம லேயிருத்தி ஓரறிவி லென்னாளும் ஊன்றிநிற்ப தெக்காலம். | 202 |
| |
அத்துவிதம் போலுமென்றன் ஆத்துமத்தினுள்ளிருந்து முத்திதர நின்ற முறையறிவ தெக்காலம். | 203 |
| |
நானின்ற பாசமதில் நானிருந்து மாளாமல் நீநின்ற கோலமதில் நிரவிநிற்ப தெக்காலம். | 204 |
| |
எள்ளும்கரும்பும் எழுமலரும் காயமும்போல் உள்ளும் புறம்புநின்ற துற்றறிவ தெக்காலம். | 205 |
| |
அன்னம் புனலைவகுத் தமிர்தத்தை யுண்டதுபோல் என்னைவகுத் துன்னை இனிக்காண்பதெக்காலம். | 206 |
| |
அந்தரத்தில் நீர் பூத் தலர்ந்தெழுந்த தாமரைபோல் சிந்தைவைத்துக் கண்டு தெரிசிப்ப தெக்காலம். | 207 |
| |
பிறப்பும் இறப்புமற்றுப் பேச்சுமற்று மூச்சுமற்று மறப்பும் நினைப்புமற்று மாண்டிருப்ப தெக்காலம். | 208 |
| |
மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்தறிவை என்னு ளொருநினைவை எழுப்பிநிற்ப தெக்காலம். | 209 |
| |
ஆசைகொண்டமாதர் அடைகனவு நீக்கியுன்மேல் ஓசைகொண்டு நானும் ஒடுங்குவது மெக்காலம். | 210 |
| |
தன்னுயிரைக் கொண்டு தான்றிரிந்த வாறதுபோல் உன்னுயிரைக் கொண்டிங் கொடுங்குவது மெக்காலம். | 211 |