சேற்றிற் கிளைநாட்டுந் திடமாம் உடலையினிக் காற்றிலுழல் சூத்திரமாய்க் காண்பதினி யெக்காலம். | 212 |
| |
என்வசமுங் கெட்டிங் கிருந்தவச மும்மழிந்து தன்வசமுங் கெட்டருளைச் சார்ந்திருப்ப தெக்காலம். | 213 |
| |
தன்னை மறந்து தலத்து நிலைமறந்து கன்மம் மறந்து கதி பெறவ தெக்காலம். | 214 |
| |
என்னை யென்னிலே மறைந்தே இருந்தபதி யும்மறந்து தன்னையுந் தானேமறந்து தனித்திருப்ப தெக்காலம். | 215 |
| |
தன்னையுந் தானேமறந்து தலைவாசற் றாழ்போட்டே உன்னைநினைந் துள்ளே யுறங்குவது மெக்காலம். | 216 |
| |
இணைபிரிந்த போதிலன்றி யின்பமுறும் அன்றிலைப்போல் துணைபிரிந்த போதருள்நூல் தொடர்ந்து கொள்வ தெக்காலம். | 217 |
| |
ஆட்டம் ஒன்றுமில்லாமல் அசைவுசற்றுங் காணாமல் தேட்டமற்ற வான்பொருளைத் தேடுவது மெக்காலம். | 218 |
| |
முன்னைவினை யாலறிவு முற்றாமற் பின்மறைந்தால் அன்னை தனைத்தேடி அமுதுண்ப தெக்காலம். | 219 |
| |
கள்ளுண் டவன்போற் களிதருமா னந்தமதால் தள்ளுண்டு நின்றாடித் தடைப்படுவ தெக்காலம். | 220 |
| |
தானென்ற ஆணவமுந் தத்துவமுங் கெட்டொழிந்தே ஏனென்ற பேச்சுமிலா திலங்குவது மெக்காலம். | 221 |
| |
நானவனாய்க் காண்பதெல்லா ஞானவிழி யாலறிந்து தானவனாய் நின்று சரணடைவ தெக்காலம். | 222 |
| |
தானந்த மில்லாத தற்பரத்தி னூடுருவி ஆனந்தங் கண்டே அமர்ந்திருப்ப தெக்காலம். | 223 |
| |
உற்ற வெளிதனிலே உற்றுப்பார்த் தந்தரத்தே மற்ற மறமாய்கை மாள்வதினி யெக்காலம். | 224 |
| |
ஏடலர்ந்த பங்கயமும் இருகருணை நேத்திரமுந் தோடணிந்த குண்டலமுந் தோன்றுவது மெக்காலம். | 225 |