பக்கம் எண் :

376சித்தர் பாடல்கள்

மயிலாடு மேகமென்றும் நரக மென்றும்
     மாய்கையென்றும் மின்னலென்றும் மவுன மென்றும்
துயிலான வாடையென்றும் சூட்ச மென்றும்
     சொல்லற்ற இடமென்றும் ஒடுக்கம் என்றும்
தயிலான பாதமென்றும் அடி முடி என்றும்
     தாயான வத்துவென்றும் பதியின் பேரே.
14
  
பேருசொன்னேன்; ஊர்சொன்னேன் இடமும் சொன்னேன்;
     பின்கலையும் முன்கலையும் ஒடுக்கம் சொன்னேன்;
பாருலகிற் பல நூலின் மார்க்கஞ் சொன்னேன்;
     பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன்;
சீருலகம் இன்னதென்று தெருட்டிச் சொன்னேன்;
     சித்தான சித்தெல்லாம் சுருக்கிச் சொன்னேன்;
நேருசொன்னேன் வழிசொன்னேன் நிலையுஞ் சொன்னேன்;
     நின்னுடம்பை யின்னதென்று பிரித்துச் சொன்னேன்;
15
  
பிரித்துரைத்தேன் சூத்திரமீ ரெட்டுக்குள்ளே
     பித்தர்களே! நன்றாகத் தெரிந்து பார்க்கில்
விரித்துரைத்த நூலினது மார்க்கஞ் சொன்னேன்;
     விள்ளாதே இந்த நூலிருக்கு தென்று
கருத்துடனே அறிந்துகொண்டு கலைமா றாதே
     காரியத்தை நினைவாலே கருத்திற் கொள்ளு;
சுருதிசொன்ன செய்தியெல்லாம் சுருக்கிச் சொன்னேன்;
     சூத்திரம்போற் பதினாறும் தொடுத்தேன் முற்றே.
16
  

ஞானம் - 5

கற்பமென்ன வெகுதூரம் போக வேண்டா!
     கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா;
சர்ப்பமென்ன நாகமதோர் தலையில்நின்று
     சாகாத கால்கண்டு முனை யிலேறி
நிற்பமென்று மனமுறுத்து மனத்தில்நின்று
     நிசமான கருநெல்லிச் சாற்றைக் காணு;
சொற்பமென்று விட்டுவிட்டால் அலைந்து போவாய்;
     துரியமென்ற பராபரத்திற் சென்று கூடே.

1