பக்கம் எண் :

428சித்தர் பாடல்கள்

காணப்பா மும்மணிகை லாய வர்க்கம்
     கழியாமற் பிள்ளைகட்கே மற்றோர்க் கில்லை;
தோணப்பா இவைமூன்றுஞ் சித்தர் சொல்வார்
     சொற்பெரிய பூரணமே சொல்ல வேணும்;
வீணப்பா ஆராலும் சொல்லக் கூடா
     வேதாந்த அந்தத்தில் வெளியிற் கூட்டும்
ஆணப்பா அறுபத்துநால் மரபுக் குள்ளே
     ஆருமே யில்லையதை அறியார் காணே.
16
  
அறியாத குளிகையுடன் சாரணையிற் குத்து
     அதன்பெருமை காணக்கொங் கணரைக் கேளு;
அறியாத அண்டமுதற் புவனம் பார்த்து
     அருவியதோர் பதம்பார்த்துத் திரிந்தே ஆடிக்
குறியாகக் கற்பமெல்லா மேறிப் பார்த்துக்
     கூறாத பூரணத்தைக் காண்பே னென்று
நெறியாக மனமுரைக்கக் குளிகை கட்டி
     நேராக மனவரையி லேறி னாரே.
17
  
ஏறினா ரறுவரையி னியல்புங் கண்டே
     இதமாக அறிவுடைய வரையிற் சென்று
தேறினார் மனமுரைத்தார் கண்டத் தேறச்
     சேர்ந்தேறச் சேர்ந்தேறி வரையிற் றாண்டிக்
கூறினா ரிவ்வளவு மொன்றோ வென்றார்
     கூசாமல் மருவரையில் குதிரைப் போட்டார்
மாறினால் சென்றுமணம் பிடித்துச் சென்றார்
     வரைமூன்றுங் கடக்கவொரு கற்ப மாச்சே.
18
  
ஆச்சப்பா நாள்வரையி லேறும் போது
     அரகரா வெகுகோடி யிடிபோல் நாதம்
மூச்சப்பா வோடாது முன்பின் றோணா
     முதிர்ந்தமன மாயையினால் பின்னுஞ் சென்றார்
கூச்சப்பா ஐவரையிற் போக்கி நின்று
     குருகுரென மொழிந்ததிலே மனமுந் தேறிப்
போச்சப்பா சடமொன்று நிராசை யாகிப்
     புக்கினார் அறுவரையிற் புக்கினாரே.
19