பக்கம் எண் :

432சித்தர் பாடல்கள்

திரும்புவையோ என்மகனே திடந்தா னுண்டோ
     சிறுபிள்ளை புத்தியல்லோ செப்பு றாய்நீ?
வளர்பிறையோ தேய்பிறையோ ரவியி னுள்ளே
     வருவதுபோ லல்லவது மாட்டி வாங்கும்
பரும்பிறையோ யோகமது பிறவி கோடி
     பாங்கான வொளிக்குள்ளே கண்ணோ கூசும்
அரும்பிறையோ மனந்தளும்பு மேவொட் டோதே
     அரகரா என்மகனே யறிவாய் நீயே.
32
  
அறியாத வரைபார்க்க நான்தா னேறி
     அய்யனே மூன்றுவரைக் குள்ளே சிக்கி
நெறியாக நால்வரையி லேறொட் டாமல்
     நிமிடத்தி லறிவினிலே வந்து நின்றே
மறிவானம் படைத்தகொங் கணரே சித்தர்
     மற்றோரை யான்காணேன் மைந்தா சொல்லு
பொறியான வழியடக்கிச் சூட்ச மாகிப்
     போனவரார் போகருடைப் பிள்ளை தானே.
33
  
பிள்ளையென்றா லவரல்லோ போக ருக்குப்
     புகழான ரிஷிகளெல்லாஞ் சித்த ரென்பார்
தள்ளையென்றா லவர்தாமூ லரிடம் போன
     சச்சிதா னந்தவின்ப மான பிள்ளை
கொள்ளையென்றா லவர் கொள்ளை ஞான வீதி
     கொடிதான சிலம்பொலியைக் கேட்டு மீண்டார்
பிள்ளையென்று வந்ததனால் கீர்த்தி யாச்சு
     வேதாந்த அந்தமெல்லாம் வெளியாய்ப் போச்சே.
34
  
போச்சென்று சொல்வதென்ன போய்வா னையா
     புத்தி சொன்ன புத்தியெல்லாம் போட்டிட் டாயோ?
வாச்சென்று நின்வயிற்றிற் பிறந்த பிள்ளை
     வந்தாலென் கெட்டாலென் மகத்வ முண்டோ?
கோச்சென்ற நாவமென்ன விடிந்தா லென்ன
     கோடிரவி காந்தியென்ன பயமுண் டாமோ?
ஓச்சென்ற சிலம்பொலியைக் கண்டு வாரேன்
     ஒருமனமாய்ப் பூரணத்தி லுன்னி டீரே.
35