பாகுசேர் மொழியுமைக்குப் பாலனாகி வாழலாம் வாகுடனே வன்னியை மருவியே வருந்திடீர். | 440 |
| | |
உண்மையான தொன்ற தொன்றை உற்றுநோக்கி உம்முளே வண்மையான வாசியுண்டு வாழ்த்தியேத்த வல்லிரேல் தண்மைபெற் றிருக்கலாம் தவமும்வந்து நேரிடும் கன்மதன்மம் ஆகுமீசர் காட்சிதானும் காணுமே. | 441 |
| | |
பாலனாக வேணுமென்று பத்திமுற்றும் என்பரே நாலுபாதம் உண்டதில் நனைந்திரண்டு அடுத்ததால் மூலநாடி தன்னில் வன்னிமூட்டியந்த நீருண ஏலவார் குழலியோடே ஈசர்பாதம் எய்துமே. | 442 |
| | |
எய்துநின்னை அன்பினால் இறைஞ்சியேத்த வல்லிரேல் எய்துமுண்மை தன்னிலே இறப்பிறப்பு அகற்றிடும் மையிலங்கு கண்ணிபங்கன் வாசிவானில் ஏறிமுன் செய்தவல் வினைகளும் சிதறுமது திண்ணமே. | 443 |
| | |
திண்ணமென்று சேதிசொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ அண்ணல்அன் புளன்புருகி அறிந்து நோக்க லாயிடும் மண்ணமதிர விண்ணதிர வாசியை நடத்திடில் நண்ணி எங்கள் ஈசனும் நமதுடலில் இருப்பனே. | 444 |
| | |
இருப்பன்எட்டெட் டெண்ணிலே இருந்து வேறதாகுவன் நெருப்புவாயு நீருமண்ணும் நீள்விசும்பும் ஆகுவான் கருப்புகுந்து காலமே கலந்துசோதி நாதனைக் குருப்புனலில் மூழ்கினார் குறித்துணர்ந்து கொள்வரே. | 445 |
| | |
கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்புணர்ந்த ஞானிகள் விள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டிவேண்டி ஏத்தினால் உள்ளுமாய் புறம்புமாய் உணர்வதற்கு உணர்வுமாய்த் தெள்ளிதாக நின்றசோதி செம்மையைத் தெளிந்திடே. | 446 |
| | |
தெளிந்தநற் சரியைதன்னில் சென்று சாலோகம் பெறும் தெளிந்த நற்கிரியை பூசை சேரலாஞ் சாமீபமே தெளிந்தநல் யோகந்தன்னில் சேரலாகும் சாரூபம் தெளிந்தஞானம் நான்கினும் சேரலாம் சாயுச்யமே. | 447 |