பக்கம் எண் :

90சித்தர் பாடல்கள்

மூவெழுத்து மூவராய் முளைத்தெழுந்த சோதியை
நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே.
516
  
தூரதூர தூரமும் தொடர்ந்தெழுந்த தூரமும்
பாரபாரம் என்றுமே பரித்திருந்த பாவிகாள்
நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லிரேல்
தூரதூர தூரமும் தொடர்ந்து கூட லாகுமே.
517
  
குண்டலங்கள் பூண்டு நீர் குளங்கடோறும் மூழ்கிறீர்
மண்டுகங்கள் போலநீர் மனத்தின்மா சறுக்கிலீர்
மண்டையேந்து கையரை மனத்திருத்த வல்லிரேல்
பண்டைமால் அயன்றொழப் பணிந்து வாழ லாகுமே.
518
  
கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறுபோல்
ஆடிரண்டு கன்றைஈன்ற அம்பலத்துள் ஆடுதே
மாடுகொண்டு வெண்ணெயுண்ணும் மானிடப் பசுக்களே
வீடுகண்டு கொண்டபின்பு வெட்டவெளியும் காணுமே.
519
  
உள்ளதோ பிறப்பதோ உயிர்ப்படங்கி நின்றிடும்
மெள்ளவந்து கிட்டநீர் வினவவேண்டு மென்கிறீர்
உள்ளதும் பிறப்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ள வாசலைத் திறந்து காணவேண்டு மாந்தரே.
520
  
நட்டகல்லை தெய்வமென்று நாலுபுட்பஞ் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லும் மந்திரமேதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில்
சுட்டசட்டி சட்டுவங் கறிச்சுவை அறியுமோ.
521
  
நானும்அல்ல நீயும் அல்ல நாதன் அல்ல ஓதுவேன்
வானில்உள்ள சோதி அல்ல சோதிநம்முள் உள்ளதே
நானும்நீயும் ஒத்தபோது நாடிக்காண லாகுமோ
தானதான தத்ததான தானதான தானனா.
522
  
நல்லதல்ல கெட்டதல்ல நடுவில்நிற்பது ஒன்றுதான்
நல்லதென்ற போதது நல்லதாகி நின்றுபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால்
நல்லதென்று நாடிநின்று நாமம் சொல்ல வேண்டுமே.
523