பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 39

இந்திய ஏழை துளிர்க்கிறான் - அவன் 
       எண்ணத்தில் சீனம் சுவர்க்கமாய்
வந்து கனவுகள் வீசுது - புது 
       வன்மையைத் தேகத்தில் ஊட்டுது!
சிந்தையில் ஊக்கம் அளிக்குது - ‘அறம் 
       செய்க’இவ் வாறென் றியம்புது!
நொந்தவர் தோளும் உயருது - பலம் 
       நூறு நூறாயிரம் ஆகுது!

யுகங்கள் பிரிவினி இல்லை காண் - தர்மம் 
       ஒன்று புதுயுகம் ஆகுமே!
நகமும் சதையும் போல் மானிடர் - எந்த 
       நாட்டினர், தீவினர் ஆயினும்
சகத்தினில் ஒற்றைக் குடும்பமாய் - உயர் 
       சாந்தம் நிலவிட வாழ்ந்திடும்
புகழுறு தர்மம் வருகுது - நகை 
       பூத்த முகத்துடன் சீனத்தில்!

எங்கும் அதன்ஒளி வீசிடும் - இனி 
       ஏது தடைகள், அடிமைகள்?
சங்கம் எடுத்து முழக்குவோம் - நாம் 
       தாளங்கள் கொட்டியே ஆடுவோம்!
மங்கள வாழ்த்துகள் பாடுவோம் - அறம் 
       வாழ்க எனக்களி கூறுவோம்
செங்க மலஒளி மேவிடும் - செஞ் 
       சீன விழாவைக் கொண்டாடுவோம்

‘முன்னணி’ - 1948