பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 97

விடுதலையே மூச்சென்று
       விளம்பி னாரும்
வேரில்லை அறம் என்றே
       உயிர்என் றோரும்
கெடுதலைசேர் நிறப்பிரிவை
       எதிர்த்த பேரும்
கிளர்ந்ததொரு புரட்சியினைக்
       கண்ட போழ்தில்,

மடுதிறந்த மகிழ்ச்சியிலே
       சோவி யத்தின்
மண்ணெல்லாம் பொன்னென்று
       கண்ணில் ஒற்றிக்
கொடுவந்தார் வாழ்த்தொலிகள்!
       புரட்சித் தாயின்
குழந்தைகளாய் மாறியவர்
       ஞானம் பெற்றார்!

வள்ளுவர்தம் நாடெங்கே?
       புத்தர் போற்றும்
வாழ்வுநிகழ் வீடெங்கே?
       ஏசு சிந்தை
கொள்ளுமோர் அறக்கொடியும்
       படர்கொம் பெங்கே?
குளிர்தருவாய் வளர்கொற்றம்
       கொண்ட தெங்கே?

உள்ளுகின்ற நபியுள்ளம்
       உறைவ தெங்கே?
ஓ! உலக ஞானியர்தம்
       ஞான மெல்லாம்
புள்ளுலகு போர்பறந்து
       பாட்டுப் பாடிப்
புலர்கின்ற சோவியத்திற்
       புகுந்து லாவும்!