உமியும் அரிசியும்
உழுத வயலில் அழகனும்
உமியை விதைத்து வைத்தனன்
முளையும் கிளம்ப வில்லையே;
மூன்று மாதம் ஆனதே!
உழுத வயலில் அரிசியை
ஓடி ஓடி விதைத்தனன்.
முளையும் கிளம்ப வில்லையே;
மூன்று மாதம் ஆனதே!
உழுத வயலில் அரிசியும்
உமியும் சேர்ந்த நெல்லையே
அழகன் விதைத்து வைத்தனன்.
அதுவும் வீணாய்ப் போகுமோ?
இல்லை, இல்லை. முளையுமே
எழும்பி மேலே வந்தது.
பல்லைக் காட்டி அழகனும்
பார்த்துப் பார்த்து மகிழ்ந்தனன்.
|