பக்கம் எண் :

மலரும் உள்ளம்157

“கோபக்காரன் என்றே ஊரிலுள்ளோர் - என்னைக் 
   கூறிடு வாரன்றோ? ஆதலினால்,
கோபத்தைக் காசியில் விட்டுவந்தேன்” - என்றே
   கூறினர் மறுமொழி தாத்தாவுமே.

கண்ணனும் உடனேயே, “தாத்தா, தாத்தா நீயும் 
   காசியில் விட்டதும் என்ன?” என்றான்.
“இந்நேரம் கோபத்தை விட்டதாய்ச் சொன்னேனே.
   எங்கே கவனமோ?” என்றுரைத்தார்.

முரளியும், “தாத்தா, நீ விட்டதென்ன?” - என்றே
   மீண்டும் ஒருமுறை கேட்டிடவே.
திரும்பவும், “கோபத்தை விட்டே” னென்றே-தாத்தா
   செப்பினர். முரளியும், “ஓகோ” என்றான்.

அருணனும் கோபுவும் அழகப்பனும் - இன்னும்
   அலமுவும் கீதா காவேரியுமே
திரும்பத் திரும்பஇக் கேள்விதனைக் - கேட்கச் 
   சீறி எழுந்தனர் தாத்தாவுமே!

“வேலையற்ற வெட்டிப் பிள்ளைகளா - என்ன
   வேடிக்கையா இங்கே காட்டுகிறீர்?
தோலை உரித்தே எடுத்திடுவேன்” -என்று
   சொல்லியே கையில் தடிஎடுத்தார்.