என்னிடம் இருந்தால்
என்னிடம் மாய ஜமக்காளம்
இருந்தால் அதனால் என்செய்வேன்?
உங்களை ஏற்றிச் சென்றிடுவேன்.
உலகைச் சுற்றிக் காட்டிடுவேன்.
கங்கை, யமுனை, காவேரி,
கடல்கள், மலைகள் கடந்திடுவேன்.
காரும் ரயிலும் ஆகாயக்
கப்பலும் வேண்டாம் என்றிடுவேன்.
சீரும் சிறப்பும் பெற்றிடுவேன்.
திக்விஜ யங்கள் செய்திடுவேன்.
என்னிடம் மந்திரக் கோல்ஒன்றும்
இருந்தால் அதனால் என்செய்வேன்?
மண்ணைப் பொன்னாய் மாற்றிடுவேன்.
வாரி வாரிக் கொடுத்திடுவேன்.
சின்னஞ் சிறிய குடிசைகளைச்
சிறந்த மாளிகை ஆக்கிடுவேன்.
|