பக்கம் எண் :

மலரும் உள்ளம்85

வித்தைக்காரன்

வித்தைக் காரன் - நல்ல 
வித்தைக் காரன் - ஜோராய் 
வேடிக்கை காட்டிவரும்
வித்தைக் காரன்.

சத்தம் போட்டே அழைத்திடுவான் 
   தமுக்கை ஓங்கி அடித்திடுவான்.
எத்த னையோ வித்தைகளை 
   எங்க ளுக்குக் காட்டிடுவான்!
                            (வித்தைக்காரன்)

கம்பம் ஒன்றில் ஏறிநிற்பான்;
   கரகம் ஒன்றைத் தலையில்வைப்பான்;
பம்ப ரம்போல் சுழன்றேஆடிப் 
   பார்த்த பேரைத் திகைக்கவைப்பான்!
                            (வித்தைக்காரன்)

கொட்டை ஒன்றைத் தரையில்வைப்பான்;
   கூடை போட்டு மூடிவைப்பான்.
எட்டு நிமிஷம் ஆகுமுன்னே
   எடுத்துப் பார்த்தால் மாஞ்செடியாம்!
                            (வித்தைக்காரன்)