பக்கம் எண் :

(தேனருவி I)

துறைப்பாடல்கள்

வருத்தம் தொலையும் அன்றோ?

குறிஞ்சித் திணை-1

{ தலைவி தலைவனுக்கு உரைத்தது }

வருத்தம் தொலையும் அன்றோ? என்னை
மணந்து கொண்டால் இந்த
வருத்தம் தொலையு மன்றோ?

பலந்து பொன்போல் வேங்கைப் பூக்கள்
பாரைமேற் பொலியும் பன்மலை நாடனே
         வருத்தம் தொலையு மன்றோ.....

கொள்ளைக் கருமுகில் அஞ்ச இடித்து-மின்னிக்
கொட்டு மழைதான் மலையைப் பொடித்து
வெள்ள அருவியைத் துணையாய்ப் பிடித்து-வாழும்
விலங்கு பறவை அனைத்தையும் மடித்துத்
துள்ளுகின்றநீள் வழியை முடித்து
நள்ளிருள்தனில் வந்தனையே இந்த
            வருத்தம் தொலையு மன்றோ?.....

உளவு காரர்கள் காணவும் கூடும்-இவ்
வூரில் நாய்களும் பலநட மாடும்
கிளைஞர் கண்டால் அவர் நெஞ்சம் வாடும்
கிட்டும் அயலவர் வாய் வசை பாடும்
களவுப் புணர்ச்சியால் பற்பல கேடும்
கண்டும் இவ் விருளில் வந்தனை இந்த
         வருத்தம் தொலையு மன்றோ?.....





( 5 )






( 10 )






( 15 )
முருகனால் வந்த நோயாம்

குறிஞ்சித்திணை -2
[தோழி தலைவனுக்குச் சொல்லியது]

முருகனால் வந்த நோயாம்! உனக்கிது
முருகனால் வந்த நோயாம்!
கருதிக் கருதிக் கண்ணான வெற்பனை
உருகும்உன் உடம்பில் வந்த இந்நோய்

                   முருகனால் வந்த நோயாம்! ...

ஏதுங்கெட்ட பூசாரி தன்னை
இட்டு வந்தாள் எனைஈன்ற அன்னை
ஓர் தட்டு நிறையக் கொட்டினாள் பொன்னை
உளறினான் அதை வாங்கிய பின்னை

                   முருகனால் வந்த நோயாம்!

சுழற்சிக் காய்களாற் கணக்கொன்று போட்டான்
காரணங்கள் சொல்லவும் மாட்டான்
கொழுத்த ஆட்டை அறுத்துப் படைத்தால்
கொடுமை தீருமென்றான்அந்தக் கோட்டான்!

                   முருகனால் வந்த நோயாம்!



( 20 )









( 25 )
இசையாயோ தோழி்

குறிஞ்சித்திணை-3

[தோழி தலைவனுக்குச் சொல்லியது]

இசையா யோதோழி?-கொடும்
பசலை படர்ந்த என்முகம் தனைப்
பார்த்திருந்தும் அவனிடம் சொல்ல
இசையா யோ தோழி?

கள்ளத்தால் வருவான்-இன்பம்
வெள்ளத் தேன் சொரிவான்-எனை
எள்ளித் தான் திரிவான்-போய்
இன்றே நீ காண இசையா யோ தோழி?

இன்னொன்றும் செய்வாய்-தோழி
என் தாயிடம் போய்-அவனை
மன்றல் முடிப்பாய் என்
மனநோய் தணிப்பாய் நீ      இசையா யோ தோழி?

தண்ணார்ந்த குன்றில் செந்
தமிழ் பாடும் அருவி-எழில்
பண் ணார்ந்த நாடன் தரும்
பயன் கொள்வதற்கே நீ     இசையா யோ தோழி?

( 30 )







( 35 )





( 40 )
வருவது நலமா?

பாலைத்திணை-1

[தோழி தலைவனுக்குச் சொல்லியது]


அவருவது நலமா? என்னுடன் நீ
வருவது நலமா?

மரமெலாம் தீப்பற்றி எரியும் கானலில்நீ
வருவது நலமா?

கருதும் கருத்தும் நடுங்கும்-கானல்
காணும் கண்ணும் நடுங்கும்
பருக்கைக் கல்லினும் முள்ளிலும்-உன்
பஞ்சான மெல்லடி எப்படி இயங்கும்?
வருவது நலமா?

வேர்வீழ்ந் துயர்ந்த வேலின்கீழும்-மிக
மிஞ்சு குளிரொடு மான்கூடிவாழும்
கார்காலத்திலா உன்னை மறப்பேன்?
கட்டாயம் வருவேன் வராவிடில் இறப்பேன்
வருவது நலமா?
( 45 )






( 50 )





( 55 )
தேய்ந்த புரிக்கயிறு

பாலைத்திணை-2

[தோழி தலைவனுக்குச் சொல்லியது]


தேய்ந்த புரிக்கயி றாயிற்றென் உள்ளம்!
ஏய்ந்த யானை இப்புறம் ஒருமுனை இழுக்க
இன்னும் ஒன்று மறுமுனை இழுக்கத் தறியில்
                 தேய்ந்த புரிக்கயிறு ஆயிற்றென் உள்ளம்

"சேயிழை வருந்துவான் போ போ"-பொருள்
தேடவந் தாய்நீ இவ்வழி வா வா"
ஆயஇரு கொள்கை இருபுறம் இழுக்க
அடையா இன்னல் அடைவத னாலே
                 தேய்ந்த புரிக்கயி றாயிற்றென் உள்ளம்

வஞ்சிக் கொடி நான் வரும் வழி பார்த்து
வாயிலில் வருவாள் போ வாள்உளம் வேர்த்து
நெஞ்சம் களிக்க அவளிடம் செல்வதா?
நெடும்பொருள் தேடஇவ்வழிச் செய்வதா?
                 தேய்ந்த புரிக்கயி றாயிற்றென் உள்ளம்

தந்தை தேட்டத்தை உண்டுயிர் வாழ்பவன்
சாகுமட்டும் பிறர் காலில் வீழ்பவன்
இந்தவா றெண்ணி இப்பாங்கு செல்வதா?
ஏந்திழை வருந்தும் இல்லமே மீள்வதா?
                 தேய்ந்த புரிக்கயி றாயிற்றென் உள்ளம்

( 60 )







( 65 )







( 70 )

கூவின இன்பக் குயில்கள்

பாலைத்திணை

{ தலைவி சாற்றியது }

கூவின இன்பக் குயில்கள்!
கூடினோர் பிரிதல் வேண்டாமென்று
             கூவின இன்பக் குயில்கள்!

தாவிய நல்லுயிர் தளிர்க்கத் தளிர்க்கத்
தணியாக் காதல் இனிக்க இனிக்கக்
             கூவின இன்பக் குயில்கள்!

இன்றிருந்து நாளைபோம் பொருள் தேடி
இன்பம் வெறுப்பவன் ஒர்இலம் பாடி
அன்றன்று புதிதாகும் சுவையை நன்றே
எடுப்பீர் என்றேஇடித் துரைப்பது போல்
             கூவின இன்பக் குயில்கள்!

பொருள் தேடச் செல்வேன் செல்வேன் என்று
புகலுவார் துணைவியர் அன்பினைக் கொன்று!
வருவது மில்லை குறித்தநாள் வாய்ப்பில்
வாய்மையா இது? என்றுமாந் தோப்பில
             கூவின இன்பக் குயில்கள்!


( 75 )







( 80 )






( 85 )
தமிழிசை போன்ற இனிய சொல்லாள்

தமிழிசை போன்ற இனிய சொல்லாளை
அணுகிட வேண்டும்! விடு! தேரை!
இமை மூடாமல் வரும்வழி மீதே
விழிவைத் திருப்பாள்! இப் போதே தமிழிசை போன்ற.....

என்றன் பிரிவால் உயிர்துடி துடிப்பாள்
என்த நேரமும் கண்ணீர் வடிப்பாள்
முன்கண்ட இன்ப இலக்கியம் படிப்பாள்-என்
முகம்பார்த் தால்தான் மனக்குறை முடிப்பாள்
                          தமிழிசை போன்ற.....

இடைச் செட்டுக் காரன் இட்ட பாதைபோல்
இவ்வழி மேடுபள்ளம் ஆத லால்
தடையின்றித் தேரின் குதிரை பறந்தால்
தமிழ்ச் செல்வி துயர்தீர்க்க முடியும் என்னால்
                          தமிழிசை போன்ற.....





( 90 )







( 95 )
கடியஓட்டடா தேரை

-முல்லைத்திணை-

{ தலைவன் தேர்ப்பாகனுக்கு உரைத்தது}

கடிய ஓட்டடா தேரைப்-பாகனே
கடிய ஓட்டடா!

கொடியெலாம் முல்லை அரும்பின! பொன்போல்
கொன்றை மலர்ந்தன மென் மேல்!
கடகட வென்றே இடித்து மின்னி எழுமோர்
கார்காலம் தொடங்கியது பார் பார்    கடிய ஓட்டடா!.....

கால் விரைந்து குட்டியொடு பெண்மான்
களர் நிலத்தில் சென்றதை ஆண்மான்
ஏல்வதா என் அன்பினால் மீட்க
ஏகும் அதுபோலென் துணைவியைக் காக்கக்
                            கடிய ஓட்டடா!.....

எப்போது வருவான் எப்போது வருவான்
என்றிராப் பகல் எதிர்பார்க்கும் இன்பத்தேன்
கைப் புறத்தை இறுகத் தழுவத் தான்
கண்ணினும் மனத்திலும் ஆவலை வைத்தேன்
                           கடிய ஓட்டடா!.....




( 100 )





( 105 )







( 110 )
ஏனத்தான் இந்தப் பொய்

மருதத் திணை

{ தலைவி தலைவனுக்குரைத்தது }


   ஏனத்தான் இந்தப் பொய்?-அந்தப்
   பரத்தை இல்லம் புகுந்தது மெய், உனக்
   கேனத்தான் இந்தப் பொய்?

பானைச் சோற்றுக்குப் பதம்ஒரு சோறு
அதோஉன் மார்பிற் கலவைச் சேறு!
நானுண்ட எச்சி லேதான் அவனென்று மாதும்
நவின்றதைக் கேட்டேன் புளித்தது காதும்
                       ஏனத்தான் இந்தப் பொய்?.....

களை யெடுப்பவர் பற்றிய வரால்மீன்
கழுவி ஆய்ந்து குழம்பிட்டு வைத்துநான்
உளமகிழ்ந் துன்றன் வரவுபார்த் திருக்கையில்
உண்மை கேட்டு மிகவும் வருந்தினேன்
                       ஏனத்தான் இந்தப் பொய்?.....

கூடி ஆடினை அவளின்பம் கருதி உன்
கூடைச் சதையிலுண்டா குன்றிமணிக் குருதி?
வாடினும் தன்னிலை மன்னுதல் மானம்
மானமிலாய் இங்கு வயந்ததே ஊனம்
                       ஏனத்தான் இந்தப் பொய்?.....

கண்டதே இல்லை அவளை என்றாய்
கடலைமே லாடையால் மறைக் கின்றாய்
பண்டுநாம் நுகர்ந்த எலாமறக் கின்றாய்
பல்காட்டிப் பஞ்சணை அச்சாரம் தந்தாய்
                       ஏனத்தான் இந்தப் பொய்?.....






( 115 )






( 120 )







( 125 )








( 130 )
அதோ வந்தாண்டி

-நெய்தல்திணை-

{ தோழி தலைவனுக்குச் சொல்லியது }


அதோ வந்தாண்டி-நல்ல
அழகு மாப்பிள்ளை நம்மை வேண்டி
                         அதோ வந்தாண்டி.....

இதுவரையிலும் பிரிந்திருந்தவன்
நிதிதிரட்டி ஊர்திரிந்தவன்      அதோ வந்தாண்டி.....

புன்னை மலர்கள் அரும்பி மலர்ந்து
பொன்னைப் போலப் பொடியைச் சொரிந்து
முன்னே தாழம் புதரை விரைந்து
மூடும் கடல் கொண்டாடும் துறைவன்
                         அதோ வந்தாண்டி.....

மறைந்து மறைந்து வந்து புணர்வான்
மணந்து செல்ல இன்று நினைந்தான்
திறந்த வானம் சிரிக்கும் பகலில்
தெருவில் யாரும் காணும் வண்ணம்
                         அதோ வந்தாண்டி.....

கடலில் எறியந அரும்பொருள் தான்
காணப் பெற்றே மணமகிழ்ந் தேன்
உடல் மெலிந்தேன் உளம் அயர்ந்
ஒழிந்தது துயர்! உயிர் மருந்தாய்
                         அதோ வந்தாண்டி.....







( 135 )







( 140 )






( 145 )



பூவால் அணிசெய்த இல்லம்

-நெய்தல்திணை 2-

{ தோழியும் செவிலியும் சொல்லியது }


பூவால் அணிசெய்தஇல்லம்-எம்மொரு
நாவால் நவிலல் அருமை அன்றோ?
பாவலர் போலச் சங்கு வளையல்கள்
பாடும் நுளைச்சியர் கண்நிகர் கருநெய்தல்
                   பூவால் அணிசெய்த இல்லம்.....

காவல் பார்த்துக் கனவில் வந்தும்-எம்
கண்ணொப் பாளின்கண் ணீரில் நனைந்தும்
ஆவல் கனியை இன்று மணந்தநீ
அன்று மணவா துறைவனே எம்நெய்தல்
                   பூவால் அணிசெய்த இல்லம்.....

நோக்குவள் உன்வரவு வந்தால் வாழ்வாள்
நொடிதொறும் அன்னவள் இறப்பாள் பிறப்பாள்
ஆக்கத் துறைவனே இன்று மணந்தாய்
அன்று மணந்திலை எங்கரு நெய்தல்
                   பூவால் அணிசெய்த இல்லம்.....




( 150 )








( 155 )

விரைந்தனர் விரைந்தனர்

-வெட்சித்திணை-


     விரைந்தனர் விரைந்தனர்
     வேள்மறவர் வெட்சிசூடியே

பொருந்தாப் பகைவர் இடம் நோக்கிப்
பெருங் கானம் இடை நீக்கி
                      விரைந்தனர் விரைந்தனர்.....

நல்லவை செய்யான் தன் நாட்டுக்கு-மாற்றான்
புல்லும் இடான் பசு மாட்டுக்கு
வல்ல ஒற்றன் ஆய்ந்தான் பகைநிலை
வளைந்தது வில்லின் நெடுந்தலை
                      விரைந்தனர் விரைந்தனர்.....

கழுத்துபணி பாடக் கருந்தலை ஆடும்
கறவை ஆன்கள் கவர்ந்தே
விழுத் தோள் மறவர் மீளும் வழியில்
விழாச் செய்கின்றனர் வெற்றி வாழ்த்தி
                      விரைந்தனர் விரைந்தனர்.....


( 160 )








( 165 )







( 170 )
கரந்தை சூடுவீர்

-கரந்தைத்திணை-


கரந்தை சூடுவீர் மறவரே-பகை
கவர்ந்த ஆனிரை மீண்டன என்று      கரந்தை சூடுவீர்.....

தெரிந்து தெரிந்து விரைந்து வந்து
செறிந்தீர் மறக்குடிப் பழஞ்சீர் தோன்ற
விரைந்து கொடிய சாக்காடு தின்ற
உயிரையும் மீட்டோம் என்றே நன்று    கரந்தை சூடுவீர்.....

வெட்சி புனைந்தவர் அதோ அதோ அதோ
வில்வாள் அம்பு பொழிகவே
கட்சி இரண்டு நெருப்புக் கக்கின
கழன்ற தலைகள்! கழன்றன வாள்கள்    கரந்தை சூடுவீர்.....

ஒருமகன் தனிநின் றசைத்த நெடுவாள்
ஒழிந்தது பகைவனை ஆயினும் பிறரால்
திருமகன் குடர் சரித்திட அத் திருமகன்
செத்தான் தன்புகழ் வைத்தான் வாழ்த்துக கரந்தை சூடுவீர்.....






( 175 )





( 180 )
மறவேந்தன் வஞ்சி சூடினான்

-வஞ்சித்திணை-

மறவேந்தன் வஞ்சி சூடினான்-எங்கள்
மறவேந்தன் வஞ்சி சூடினான்
இளமா எருதென எழுந்தெங்கள்
                   மறவேந்தன் வஞ்சி சூடினான்.....

    வீரமுர சியம்ப, மிகு
    வெற்றி யானை முழங்க
ஆர்ந்த வாளும் ஏந்த படை
மேற்சினந் தே கிளம்ப  மறவேந்தன் வஞ்சி சூடினான்.....

  நீள் குடை விரிந்தெழ-ஒளி
  வாள் உறை பெயர்ந்தெழ
தோளுயர்ந்த மறவோர்கள் சினம்
தோன்ற வே கிளம்ப   மறவேந்தன் வஞ்சி சூடினான்.....

  வெற்றி கண்ட இறைவன்-புகழ்
  விள்ளும் நீ ளுலகமே
அற்றதே பகைவர் நாடு!-மனம்
யாவும் நொந்து போகும் மறவேந்தன் வஞ்சி சூடினான்.....

( 185 )






( 190 )





( 195 )


காஞ்சி சூடினானே

-காஞ்சித்திணை-


காஞ்சி சூடினானே-மன்னன்
காஞ்சி சூடினானே

கடிநகர் மேலொரு
பகைவரு வதனால்

படியதிர்ந் திடவொரு
துடிமுழங் கிடவே

காஞ்சி சூடி எழுந்தான்-மன்னன்
காஞ்சி சூடி எழுந்தான்

மறக்குடி தனில்வாழும்
அறத்தகு போரின்

திறத்தவரே படை
பெறக்கட வீர்எனக்

காஞ்சி சூடி எழுந்தான்-மன்னன்
காஞ்சி சூடி எழுந்தான்

வெறுப்புறு பகைதனைப்
பகற்கதிர் சாயுமுன்
அழிப்பேன், அல்லது
பழிப்படை வேன்எனக்

காஞ்சி சூடி எழுந்தான்-மன்னன்
காஞ்சி சூடி எழுந்தான்

ஒரு பெரு மறவன்
அயலவன் தலையை

இதுபெறு வாந்என
அரசெதிர் தரவே

காஞ்சி சூடி எழுந்தான்-மன்னன்
காஞ்சி சூடி எழுந்தான்

பெருநிதி பெறுவாய்
பெருநிதி பெறுவாய்

திறல்மிக உடையோய்
மறவா எனவே

காஞ்சி சூடி எழுந்தான்-மன்னன்
காஞ்சி சூடி எழுந்தான்.

( 200 )






( 205 )









( 210 )







( 215 )







( 220 )








( 225 )







( 230 )
கடலொன்று வந்தது போல

-காஞ்சித்திணை-

{ காவடிச் சிந்து }


கடலொன்று வந்தது போலே பகைவரின்
படைஒன்று வந்தது கண்டான்-மன்னன்
காஞ்சிமலர் சூடிக் கொண்டான்-மிக்க
அடலுண்டு தோளினில் எதிர்ச் சென்று தாக்குக
மறவரே என்று விண்டான்

படையும் பகைப்படையும் அடுபோரில் விடும் அம்பு
பருவேழத் துடலையூ டுருவி-அங்குப்
பாச்சும் குருதிமலை அருவி-அந்த
அடைவஞ் சியான்சண்டை இட அஞ்சி டாமையால்
'தொடர்க' என்றான் வாட கருவி

தோளில்இலகு காஞ்சி யாளன் மறவர்படை
சூழக் குடைவிடுத்த பின்னே-"கதிர்
மேலைப் பறம்மறையும் முன்னே-தீயன்
மாளச்செய் வேன் அன்றி மற்றவர்க்கா ளாவேன
என்றனன் வஞ்சினம் என்னே!

மூளும்சண் டைநடுவில் ஆளன்ஒருவன், பகை
யாளன் தலையை வெட்டி ஏந்தினான்-அங்கு
மொத்த படைக்கடலை நீந்தினான்-மன்னன்
தாளில் அதனை இட்டு மாளாத நிதிபெற்றுத்
தாங்கா மகிழ்ச்சிகள் மாந்தினான்

ஒர்பால் நிலைத்திட்ட தேர்போல் உருப்பெற்ற
கூர்வேல் மறச்செம்மல் செத்தானை-மனை
மார்பால் அணைத்தென்றன் அத்தான்-என்
சார்பால் இருந்தேன் உன் சாவால் இதோ என்று
சாய்ந்தாள் உயிர்வில கத்தான்

போரிடு கூட்டம் குலைந்திடு நேரத்தும்
ஒர்மறவன் தோள் செழித்துப்-பகை
வேரின் உறுதி யழித்துத்-தன்
மார்பின் புறத்தினிற் றான்பெற்ற புண்ணிடை
வேல்வைத் திறந்தான் கிழித்து

வேல்வீழ்ந்து மாண்டு விழுந்தவனை அவன்
வேல்விழி மங்கை அடுத்தே-அந்த
வேலினைக் கையில் எடுத்தே-தன்
கோலக் குலையினில் குத்திக்கொண்டால் தனைக்
கொண்டவனோடு படுத்தே

மூலைக்குமூலை உலவித் திறஞ் செய்து
வாய்க்கும் படைகளை நோக்கி-யானை
மேல்முழங் கும்தற போக்கிப்-படை
நாளும் ஒரேவழி ஏறுக என்றனன்
நற்கழலோன் உளம் ஊக்கி




( 235 )





( 240 )





( 245 )






( 250 )






( 255 )






( 260 )






( 265 )






( 270 )
சூழ்ந்தது பகைப்படை

-நொச்சித் திணை-

{ எயில் காத்தல் நொச்சி }

{ லாவணி மெட்டு }

சூழ்ந்தது பகைப்படை சூழ்ந்தது சூழ்ந்ததென்று
தொடர்மதில் காக்க நொச்சி சூடினார் சூடினார்-ஆடி
வீழ்ந்திடப் பகைமேல் வாளைச் சுழற்றிச் சிலர்
வீழ்ந்து பெரும்புகழைத் தேடினார் தேடினார்

ஆர்த்திடும் நந்தும் கொம்பும் ஆர்த்தே அகழழிக்கச்
சேர்ந்த உமிஞைப் படை சீறுமே-வேல்
பாய்ந்தது நொச்சிப் படை பாய்ந்தது பகைத் திறத்தைப்
பஞ்சாய்ப் பறக்கடித்து மீறுமே

அதிரும் படை நடுங்கக் குதிரை மறமும் காட்டி
எங்கணும் கைத்திறமும் காட்டுவார்-நொச்சி
அதிரும்படி அவளும் ஆளுக்கோ ராள்குறித்தே
அம்புபறக்க வில்லில் நாட்டுவார் நாட்டுவார்!



( 275 )






( 280 )