பக்கம் எண் :

(தேனருவி )
இயற்கை எழில்
நீலவான மீது

நீலவான மீது தோன்றும்
கோல மென்ன சொல்வேன் தோழி நீலவான மீது.....

ஞால மெங்கும் குளிரும் ஒளியும்
நல்கும் திங்கள் அங்குக் கண்டேன்         நீலவான மீது.....

முத்துக் குவியல் இறைந்த துண்டோ?
முல்லை காடோ கூட்ட வண்டோ?
புத்தம் புதுநிலா வின் சிரிப்புப்
புனிதத் தாரகை எனத் துளித்ததோ?         நீலவான மீது.....

அழகு காட்டி இயற்கை அன்னை
அன்பு கொள்ளச் செய்தாள் என்னை
பழகப் பழக என்கண் முன்னைப்
பண்ணும் புதுமை என்னே! என்னே        நீலவான மீது.....






( 5 )





( 10 )


தழைந்த சோலை

தழைந்த சோலை நிறைந்த மலர்கள்
தமிழ்சா டிடும் வண்டு-நல்
அமிழ்தா கிய தென்றல்-பாராய் தழைந்த சோலை.....

அழகிய மயில்குயில் ஆடும் பாடும்
அண்டும் சிட்டுகள் கூடும் குலவும்
எழிலொடு தளிரொடு படர்கொடி முல்லை
இன்பம் இன்பம் இன்பம் பாராய்  தழைந்த சோலை.....

தங்கத் தகட்டில் வெள்ளிக் காசு
சார்ந்த மேனிக் கலைமான் காதல்
பொங்கித் தேடித் துணையைக் கூடும்
புதுமை புதுமை புதுமை பாராய்        தழைந்த சோலை.....



( 15 )








( 20 )
சோலை! சோலை! சோலை!

சோலை சோலை சோலை-இன்பம்
துய்ப்பது தான் என் வேலை
மாலை தழுவித் தென்றல் முழுகி-அதோ
மலர்கள் எழுதி வண்ணம் தீட்டும்
                        சோலை சோலை சோலை.....

ஆலுயர்ந்து நிழல் தரும் அந்த
ஆலயத்தில் மாமயில் தோகை
மேல்விரித்து வேடிக்கை காட்டும்!
விளாம்பழத்தைப் பந்தாடும் மந்தி!-அதோ
களை இழக்கும் அழகுசாமந்தி
                        சோலை சோலை சோலை.....

பொன் னோடை இருளொடு கலக்கும்
பொழுது நோக்கித் தொழுதிடும் அல்லி
தன்னிலே வண்டு பஞ்சுரம் பாடும்
தமிழிசை உயர்வென்று சொல்லி
தவளை இரைச்சல் குயிலுக்குத் தொல்லை
தருவது கண்டு சிரிக்கும் வெண்முல்லை
                        சோலை சோலை சோலை.....


( 25 )






( 30 )





( 35 )



குளிர் கொண்டு வந்தது

குளிர் கொண்டு வந்தது மாலை-நறுமணம்
கொழித்தது மணிமலர்ச் சோலை-இனிதான்
                           குளிர் கொண்டு.....

வெளிஎன்ற பெரும் பட விரிப்பில்-இச்சோலை
குளிர்கொண்டெழுதிய இயற்கையின் சிரிப்பு
                           குளிர் கொண்டு.....

களிகொண்டு மயிலாடும் மன்றில்-இனிதான
இசைகொண்டு வந்திடும் தென்றல்
தளிரெல்லாம் மெருகுள்ள பச்சை-இக்காட்சி
தனி இயற்கை நமக்கிட்ட பிச்சை குளிர் கொண்டு.....

பச்சைப் பசுங் கொடியின் முல்லை-மல்லிகை
பாய்ச்சும் மணத்துக் கீடில்லை
மச்சு வளைத்தன பெருமரக் கிளைகள்
வரிசை விளக்குகள் அங்குள்ள மலர்கள் குளிர் கொண்டு.....


( 40 )







( 45 )






( 50 )
பாடும் தாமரைப் பொய்கை

பாடும் தாமரைப் பொய்கை-வண்டு
பாடும் தாமரைப் பொய்கை
பச்சிலைப் பட்டுவி ரித்துமுத் துத்துளி
பரப்பி வாய்வட்டுச் சிரித்துச் சிரித்துப்
                          பாடும் தாமரைப் பொய்கை.....

இதழும் தென்றலும் அசையும்-இசை
இன்பமும் மணமும் பாசையும்
புதிய செவ்விதழ் உண்டு பின்னும்
கரிய நெய்தல் பூவிற்பு ரண்டு
கண்ட பெண்களைக் கற்பழிக்க எண்ணம்
கொண்டு திரியும் குண்டரைப்போல் வண்டு
                          பாடும் தாமரைப் பொய்கை.....

காலையிற் பிரிந்த கணவன் தனக்குக்
காத்திருந் தேதன் மனைக்கு
மாலைவரும் என்று தேம்பும்-ஒரு
மங்கைபோல் அல்லியும் கூம்பும்!
சேலொடு வாளைகள் துள்ளிக் கரைஉயர்
தேன்கூ டழிக்கையில் கானக் கருங்குயில்
                          பாடும் தாமரைப் பொய்கை.....







( 55 )




( 60 )






( 65 )
வான் தழுவும் மாமலை

வான் தழுவும் மாமலை பாராய்
நான் தழுவும் ஆரா வமுதே!

கான்முழுதும் ஆடிப்பாடி வரும் அருவி-பார்
கயலுக்கு வீழ்ந்திடும் கிச்சிலிக் குருவி
                          வான் தழுவும் மாமலை.....

ஒளிதழுவிய வள்ளிக் கொடியும்-மலர்
உரை வண்டு சிதறும் பொன்பொடியும்
களி செய்திடும் உலகுக்கு நன்மடமானே-நமைக்
காதல் செய்ய வைத்தது மெய்தானே!
                          வான் தழுவும் மாமலை.....

உடல் தழுவிட வீசும் காற்றும்-நம்
உயிர் தழுவிடக் கமழும் மணமும்
விடமனமிலை! கட்டித் தழுவும் இன்பம்
விடமனம் வருமா? அப்படிப் போலே!
                          வான் தழுவும் மாமலை.....






( 70 )







( 75 )




பளபளா! பளபளா!


   பளபளா பளபளா
   பளபளா என்று

பச்சைத் தவளைகள் குட்டைக் கரையினில்
தச்சுப் பட்டரை போலே-அவை
கத்திக் கிடந்த தாலே

   தளபளா தளபளா
   தளபளா என்று

தப்பட் டைகொட் டிக்கரு வரால்கள்
குட்டிக் குரவைகள் துள்ளும்-துணி
தப்பும் கல்லையும் தள்ளும்

   மளபளா மளபளா
   மளபளா என்று

மட்டை கிளையைஒ டித்துக் காய்கனி
கொட்டைப் பாக்கொடு தெங்கு-கீழே
விட்டெறியும் குரங்கு

   சொளசொளசொளா
   சொளசொளா என்று

தொட்டித் தேனையும் நெட்டிப் பூம்பொடி
தட்டிக் குளவிகள் கொட்டும்-ஒரு
குட்டிக் குரங்கை மட்டும்



( 80 )






( 85 )






( 90 )

 

 

 

( 95 )