பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு131

Untitled Document
850 பஞ்சினையான் பன்னுவேனோ? பணிசெய்வேனோ? - இந்தப்
     பசலை அழாதபடி பால்கொடுப்பேனோ?
நெஞ்சிரக்கமுள்ளவரே கொஞ்சம் பொறுத்தால் - இன்னும்
     நேரியநல் லாடை நெய்துகொண்டு வாரோமோ?

851 அஞ்சு வயதுமகள் கோலம் இட்டால் - அதை
     அழகில்லை என்றழிக்கும் தாயரும் உண்டோ?
பஞ்சு படுவதிலும் பெரும்பாடு - நாங்கள்
     படுவதும் நீங்கள்அறி யாததோ? ஐயா!

852 காசுமியர் சால்வை நெய்த கையும் இலையோ - உயர்
     காசியிலே நெய்தபட்டின் காலமும் போச்சோ?
மாசிலாத டாக்காவின் மஸ்லினாடை - இன்னும்
     வாவென்றால் வாராதோ? வளர்ந்திடாதோ?

853 அந்நிய நாடுகளுக் காடையனுப்பி - மானம்
     அழியாமல் காத்ததுங்கள் முன்னோர் அல்லவோ?
இந்நிலை மறந்துநீங்கள் இந்தநாளில் - உங்கள்
     இடுப்புத் துணிக்கு அலைவ திழிவல்லவோ?

854 சாயமிட்ட சேலைகள் நெய்துதாராமோ? - நல்ல
     சரிகையில் வேலைசெய்து கொண்டு வாரோமோ?
நேயமெழ ஆதரித்தால் போதும், ஐயா! - இந்த
     நீணிலத்தில் வெற்றியொடு நிற்போம் ஐயா!

855 கைகால் களைக்க நெய்த கதராடை - இரு
     கண்கள் சடைய நெய்த கதராடை;
ஐயா, நீர் வாங்கியதை அணிவீரோ? - எங்கள்
     அரும்பசிக்கு அன்னம் ஏதும் அளிப்பீரோ?

856 குறுக்கு முறியநெய்த கதராடை - கும்பிக்
     கொதிப்பை அடக்கிநெய்த கதராடை;
மறுத்துநீர் தள்ளாமல் கொள்ளுவீரோ? - எங்கள்
     வயிற்றில் எரிதணியச் செய்குவீரோ?

857 தேசமெல்லாம் புகழ்ந்திடும் ஆடை, ஐயா! - மேலைச்
     சீமையையும் நடுக்கிடும் ஆடை, ஐயா!
காசுபணம் இல்லாத ஏழைகளுக்காய் - அந்தக்
     காந்திமகான் போற்றும்காம தேனு, ஐயா!