பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு191

Untitled Document
1180 பள்ளிப் படிப்பறியான் பைந்தமிழும் ஆரியமும்
தெள்ளிச் சுவைதேரும் செந்நாவான் - உள்ளிநிதம்
சித்தம் சிவன்பால் செலுத்தும் கதிரேசன்
நித்தம் வளர்க நிலத்து.

1181 எங்கும் நிறைபொருளாய் எப்பொருட்கும் அப்பாலாய்த்
தங்கும் தனிப்பொருளின் தண்ணருளால் - பொங்குபுகழ்ச்
செந்தமிழத் தாய்பெற்ற செல்வன் கதிரேசன்
சந்ததமும் வாழ்க தழைத்து!

வேறு

1182 சிந்தைக் கினிய செவிக்கினிய
     திருவா சகத்தின் உட்பொருளை
முந்தும் அறிவால் ஆராய்ந்து
     முத்தே வர்க்கும் முதற்றேவன்
எந்தை சிவனே யாமென்ன
     எவர்க்கும் நன்றாய் எடுத்தோத
வந்த பெரும்பே ராசிரியன்
     வாழ்க வாழ்க வாழ்கவே!

1183 இனிய தமிழைச் செந்தமிழை
     என்றும் ஓங்கி வளர்தமிழை
கனியும் அன்புமிக இளைஞர்
     கற்று நெஞ்சம் களிப்பெய்த
புனித முறையில் போதனைசெய்
     புலவர் பெருமான் கதிரேசன்
நனியில் வுலகில் வாழவரம்
     நங்கை பாகன் நல்குவே!

1184 ஆரிய யத்தின் நிலைகண்டோன்,
     அரிய தமிழன் கடலானோன்,
பாரி அண்ணா மலைமன்னன்
     பரிந்து போற்று முதுபுலவன்,
தேரும் இனிய சொல்லால் எம்
     சிந்தை கவரும் கதிரேசன்
பேரும் புகழும் பெருவாழ்வும்
     பெற்று நிதமும் வாழ்கவே!