பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு293

Untitled Document
1415   பத்துத் தலையுள்ள ராவணரோ? - பெரும்
பங்கு நீர் கேட்ட முறையும் ஏதோ?
சொத்துக் குரியரும் நீவிரேயோ; - நாங்கள்
தோட்டப் புழுக்களோ? சொல்லும் ஐயா?
1416 உள்ள வகையெல்லாம் உங்களுக்கோ? - நாங்கள்
உண்ணாத சோறும் உமதேயோ?
கள்ள வழக்குஇனிச் செல்லாதையா! அந்தக்
காலமும் சென்று கழிந்ததையா!
1417 பண்ணை முழுவதும் உமக்கானால் - எம்மைப்
பத்திரம் ஒப்பிடத் தேடுவதேன்?
கண்ணை விழித்துநீர் கண்டீரோ? - இந்தக்
காலத்தின் போக்கும் உணர்ந்திடீரோ?
1418 சீறிப் பறித்தெங்கள் வாயமுதை - உங்கள்
செல்வர்க் களிப்பது அழகாமோ?
தேறித் தெளிந்த பெரியவரே! - இது
தெய்வம் பொறுக்கும் செயல் ஆமோ?
1419 தேடிய தேட்டம் அளித்த தெல்லாம் - உங்கள்
செல்வச் சிறுவர்க்கும் போதாதோ?
கூடஇப் பங்கும் பிடுங்கி அவர்க்குக்
கொடு்த்திட உள்ளம் துணிந்தீரோ?
1420 நெற்றி வியர்வை நிலத்தில் விழ - நீரும்
நித்தம் உழைத்தது எமக்கேயோ?
பற்றிலா நெஞ்சம் படைத்தவரே! - பெரும்
பங்குநீர் கேட்கும் முறையும் ஏதோ?
1421 கட்டி உழுவதும் மக்களுக்காம் - அந்தக்
காளைக்கு வைக்கோல் குடும்பத்திலாம்;
சட்டம் இதுநல்ல சட்டம், ஐயா! - எந்தச்
சாத்திரம் கண்டு படித்தீர் ஐயா!
1422 குண்டுரம் தோட்டக் குழைகளை - நீரும்
குடும்ப வயலில் இடுவதுண்டோ?
உண்ட உணவுக்கு வஞ்சகம் செய்பவர்
உம்மைப் போல் இந்த உலகில் இல்லை.