பக்கம் எண் :

294கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1423 பண்டம் பொருளெலாம் கொள்ளை கொண்டீர் மேலும்
பங்கும் அதிகமாய் வேண்டுகின்றீர்;
சண்டைக்கும் நல்ல கொடி கட்டினீர் - இது
சற்றும் உமக்குத் தருமோ? ஐயா!
1424 கொள்ளிக் காசன்றிஉம் மக்களுக்கு - எங்கள்
குடும்ப வகையில் உரிமை உண்டோ?
அள்ளிப் பெரும்பங் கெடுத்தவர் கையில்
அளிப்ப துமக்குச் சரியாமோ?
1425 சாகை சாகை என்று சத்தமிட்டீர் - அந்தச்;
சாகைகள் தம்முள்ளே ஒப்பதுண்டோ?
ஊகமாய்த் தாவர நூலைப் படித்து - அதன்
உண்மை வழிகண் டொழுகுவீரே
1426 ஆறு பிஞ்சுள்ள தொருகிளையாம் - மற்றது
ஆயிரம் கொண்ட பெருங்கிளையாம்;
ஏறும் உணவுப் பொருளினை - இம்மரம்
எப்படிப் பங்கிடும்? செப்புவீரே
1427 சாகைப் பாகம் அனியாயப் பாகம் - அது
சண்டைகள் மூட்டும் சழக்குப் பாகம்
நோக மனதைப்புண் ணாக்கும் பாகம் - ஒரு
நூல்வழி சென்றிடா நொண்டிப் பாகம்
1428 இருந்தும் இறந்தவர் ஆக்கும் பாகம் - எம்மை
ஏழைக ளாக்கத் துணியும் பாகம்;
திருந்தும் அறிஞர் இகழும் பாகம் - நன்மை
சேராத பாகம் அச் சாகைப் பாகம்.
1429 சாகைப் பாகம் சட்ட மாக்குவதே - எங்கள்
சாவுக்குத் தூது விடுவது, ஐயா!
காகமாய் எங்கும் பறந்து திரிந்து - இன்னும்
காலம் கழிப்பது கஷ்டம், ஐயா!
1430 சட்டம் தெரிந்தவர் கூறும் பாகம் - தர்ம
சாத்திர சம்மத மானபாகம்;
திட்டமாய்ச் செல்வம் வளர்க்கும் பாகம் - நாங்கள்
செப்பும் தனித்தனிப் பாகம், ஐயா!