பக்கம் எண் :

362கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1674 மலர்ந்து நல்ல மணம்வீசி
     வையம் புகழ வாழாமல்,
உலர்ந்து வீழும் அரும்புகளில்
     உலகில் யாரே எண்ணிடுவார்?
கலந்த திருவும் யௌவனமும்
     கண்ணுக் கினிய மெய்யழகும்
குலைந்து போகும் என்றறிஞர்
      கூறும் கூற்றில் ஐயமுண்டோ?
5

1675 பலநூல் கற்ற பண்டிதர்கள்
     பலரும் சபைகள் பலகூடிச்
கலகம் வாதம் செய்திடுக;
     கண்டங் கிழிய முழங்கிடுக
மலரும் மலர்கள் வாடலும்
     இவ் வாழ்வு நிலையா தோடலுமே
உலகம் கண்ட உண்மைகளாம்;
     உண்டோ மற்றொன்று உரைத்திடவே?
6

1676 சிரித்த ரோஜா மலரைப்பார்,
     செப்பும் இனிய மொழியைக்கேள்;
‘அருத்தி யோடிவ் வுலகில்வந்து
     அழகார் நந்த வனமதிலே,
பரித்த பட்டுப் பைகீறிப்
     பைம்பொன் நிதியைப் படிமீது
விரித்து வீசி எங்கெங்கும்
     விதைத்துச் செல்வன்’ என்றிடுமே.
7

1677 நினைப்பு நீண்டு தழைத்துவரும்;
     நீறி வெந்து சாம்பருமாம்;
அனைத்தும் பாலை வனத்தினிலே
     அமையும் பனிபோல் அரைநொடியில்,
மனத்தில் தோன்றி நிலையாது
     மாண்டு மறைதல் உண்மையதாம்;
எனைத்து நூலின் வலியாலும்
     இதனை மறுக்க இயலாதே.
8