Untitled Document
வையாபுரிப்பிள்ளையின் முன்னுரை |
தற்காலத்தில் கவிஞர்கள் அனைவரிலும் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தலைசிறந்தவர் என்று முன்பு ஒருமுறை நான் எழுதினேன்.இது உபசாரமல்ல, உண்மையே என்பது நாட்கள்செல்லச் செல்லத் தெள்ளத் தெளிவாகி வருகிறது. கவிமணியின் கவிதைகள் தமிழர் பண்பாட்டிலும் மரபிலும் பிறந்தவை; உள்ளத்தே அமுதூறத் தித்திப்பவை. சுவைத்துச் சுவைத்துச் சொல்லுந்தோறும் இனிமை கனிந்து கரப்பவை, பார்ப்பதற்கு இனிதாய், மோப்பதற்கு றியதாய், வாயிலிட்டுச் சுவைக்குந்தோறும் ரஸங்கனிந்து ஊறுவதாய், உள்ளுந்தோறும் அமுதெனத் தித்தித்து அவாவை மேன்மேலும் பொங்கி யெழச் செய்வதாயுள்ள இன்னறுங் கனியை ஒத்திருப்பவை கவிமணியின் கவிதைகள். இக் கவிதைகள் திடீரெனக்காய்ப்பதுமில்லை; திடீரெனக்கனிவதுமில்லை.ஆன்ம-பரிபக்குவ காலத்திலேதான் காய்த்து முதிர்ந்து இவை கனிய வல்லவை.கவிமணியை நேரிற்காணும் பேறுபெற்றோர், அவரது ஆன்ம பரிபக்குவ நிலையை உணர்வார்கள். அத்தகைய நிலையிலிருந்துதான் ‘மலரும் மாலையும்’, ‘ஆசிய ஜோதி’, முதலிய கவிதைத் தொகுதிகள் தோன்றவல்லன என எளிதில் தெரிந்து கொள்வார்கள். இந்த ஆன்ம நிலையின் ஒரு முகப்பினையே ‘மலரும் மாலையும்’ என்ற தொகுதியில் காண்கிறோம். இகமும், பரமும் இதில் கலந்து கூட்டுறவு கொண்டு இனிமையாய் விளங்குகின்றன. புத்தபிரானைப்பற்றிய பாடல்கள் இக வாழ்வின் சிகரமாய் மேம்பட்டு நிற்கின்றன. இகவாழ்வை மகிழ்ச்சி நிரம்பச் செய்யவல்லநாட்டுப்பாடல்கள்,இயற்கைபற்றியபாடல்கள் முதலியன இவ்வாழ்வின் பலதிறப்பட்ட அம்சங்களையும் நம் மனத்தில் ஆழ்ந்து வேரூன்றச் செய்து விடுகின்றன. சிறுவர் சிறுமியரைப் பற்றிய பாடல்கள் அவர்களிடத்தே சிறந்து விளங்கும் தெய்விகத் தன்மையை நமக்கு விளங்க வைக்கின்றன. அவர்களைத் ‘தெய்வமொடு ஜீவன் வசிக்கும் திருக்கோயில்கள்’ என்று கூறலாம். இக்கவிதைத் தொகுதிகளில் நேரே தெய்வம் பற்றிய பாடல்களும் சில உள்ளன. இவையும் இகவாழ்வு நிரம்புவதற்கு இன்றியமையாது வண்டப்படும் தெய்வ உணர்ச்சியை நமக்கு ஊட்டுகின்றன. மீராபாயின் சரிதப்பாடல்கள் | |
|
|