பக்கம் எண் :

பக்கம் :108

15. இசைத்திறம் உணர எழுந்த காதை

 

அடிகளார் ஆணை

 

பூங்கொடி யாகிய பொற்புடைச் செல்வி
ஆங்கண் மீண்டதும் அருண்மொழிக் குரைப்போள்
`மீனவன் திறமெலாம் விளம்பித் தமிழால்
ஆன நல்லிசை யாண்டும் பரவிடச்
 
  சுவடியின் துணையால் தொண்டியற் றென்று 5
  தவறிலா அடிகள் சாற்றினர்' என்றனள்;  
     
 

அருண்மொழியும் இசைதல்

 
     
  `ஆம்என் மகளே! அதூஉஞ் சாலும்
தோமறு தமிழிசை துலங்குதல் வேண்டி
மீண்டும் அப்பணி மேவுதல் வேண்டும்;
 
  பூண்டநல் லன்பரைப் பூரியர் கொலைசெய 10
  ஈண்டிய துயரால் இசைத்தொழில் துறந்தோம்;
இவ்வணம் நம்மனோர் இசைப்பணி வெறுத்திடின்
செவ்விய அவ்விசை சீருறல் யாங்ஙனம்?
துயரால் துறத்தல் தன்னல மாகும்
 
  அயரா உழைப்பால் அப்பணி புரிகுவம் 15
  எண்ணி எண்ணி இம்முடி பேற்றேன்;
அண்ணலும் அம்முடி பறைந்தன ராகலின்
இன்னே அதனை இயற்றுதல் வேண்டும்;
கொன்னே வாழ்நாள் குறைவது கண்டோம்
 
  விழுங்கி உறங்கிப் பிணியால் மூப்பால் 20
  விழுந்து மாய்தல் வீணே யாதலின்
புதுமைச் சுவடியின் பொருளெலாம் தெளிந்து
போதல் நன்'றெனப் புகன்றனள் அருண்மொழி;
 

---------------------------------------------------------------

  அதூஉம் - அதுவும், சாலும் - பொருந்தும், பூரியர் - கயவர், கொன்னே - வீணாக.