பக்கம் எண் :

பக்கம் :144பூங்கொடி

 

 
  விளக்கிலா இருளில் வெய்துயிர்ப் புடனே
புல்லிதழ் மென்மலர் பொதுளிய பஞ்சணை
 
  கல்லென வருத்தக் கண்படை பெறாஅது 155
  பொழுதுபுலர் காறும் புரண்டிருந் ததூஉம்,
எழுகதிர்ச் செல்வன் எழில்முகம் காட்டத்
தோமறு செல்வி தாமரைக் கண்ணி
காமம் கெடுத்திடக் கழற்றுரை மொழிந்ததூஉம்,
 
  எஞ்சா துரைத்தபின் `ஏழிசை வல்ல 160
  வஞ்சீ! இன்னுமவ் வளரிளம் பூங்கொடி
நெஞ்சுவிட் டகன்றிலள் நிலைத்தனள் ஆயினும்
நெஞ்சு கொடுக்கிலள் நிலையாய் நின்றனள்;
கொஞ்சும் கிளிமொழி கொடும்நினை வதனால்
 
  துஞ்சுவ தன்றித் துணைசெய் வோரை 165
  இன்னும் காண்கிலேன்' என்றவன் இயம்ப;  
     
 

வஞ்சியின் ஆறுதல்மொழி

 
     
  `கொடுமொழி யிதனைக் கூறேல் பெரும!
விடுதுயர்! இனியுன் வேட்கை நிறைவுறும்
அஞ்சுதல் ஒழிமதி! ஆர்துணை என்றோர்
 
  வெஞ்சொல் மொழிந்தனை! வஞ்சிஎன் துணையால் 170
  அழகிய பூங்கொடி ஆர்வம் தழைத்திடக்
கொழுகொம் பென்றுனைத் தழுவிட வரூஉம்;
காமம் ஒதுக்கிய கடவுளும் ஈங்கிலை
ஏமம் அஃதே ஈண்டுயிர் தமக்கெலாம்;
 
  கடவுளும் மாந்தரும் கண்டுணர் காமம் 175
  இன்றெனின் உலகும் உயிரும் இன்றாம்;
அவளும் நீயும் அதன்வழிப் படாஅது
தவிர்தல் ஒல்லுமோ? தலைவ ஒன்றுகேள்!
 

---------------------------------------------------------------

  பொதுளிய - நிறைந்த, கண்படை - உறக்கம், பெறாஅது - பெறாமல், கழற்றுரை - இடித்துரை, துஞ்சுவது - இறப்பது. ஏமம் - இன்பம்.