பக்கம் எண் :

நூல்நிலையம் அமைத்த காதைபக்கம் : 163

 
  சீரிய நின்பணி செயற்பட வேனும்
கோரிய என்மொழி கொண்டருள் செல்வீ!
மீறிய அவாவின் வேண்டுவல் யாதெனக்
 
  கூறுக நீ'எனக் குறையிரந் தனரே! 100
     
 

நூலகம் அமைக்கப் பூங்கொடி வேண்டுதல்

 
     
  பெருமகன் உளத்து வருவிருப் பகற்ற
ஒருவழி யறியாள் ஒப்பின ளாகித்
`திருமிக வுடையாய்! செயிரறு கொடையாய்!
ஒருபெரும் நூலகம் ஊரிடை நிறுவக்
 
  கருதுவ துடையேன், காணும் அதுதான் 105
  தென்மொழி முதலாப் பன்மொழிச் சுவடிகள்
நன்மை தருவன நாடித் தொகுத்தே
யாண்டும் இதற்கிணை இல்லெனு மாறு
பூண்டநற் புகழொடு பொலிவுறல் வேண்டும்;
 
     
 

தனித்தனி இடங்கள்

 
     
  தொன்னூல் பலவும் துறையறி புலவர் 110
  அந்நூல் துருவி ஆய்வுரை கண்டு
நன்னூல் பலப்பல நல்குதற் பொருட்டும்,
கற்பனை வல்ல காவியப் புலவர்
சொற்பொருள் பொதிந்த தொழுதகு காப்பியம்
 
  பற்பல படைக்க முற்படும் பொருட்டும், 115
  நுழைபுலம் தரூஉம் நூலகம் அதனுள்
எழிலும் அவர்தமக் கேற்றநற் பொருளும்
கழிமிக நிரம்பிய கண்கவர் இடங்கள்
தனித்தனி அமைத்துத் தருதலும் வேண்டும்
 
  கனித்தமிழ் தழைக்கஓர் கருவி ஆகும் 120
  எனத்தகும் நினைவால் ஈண்டியது புகன்றேன்;  

---------------------------------------------------------------

  கோரிய - வேண்டிக்கொண்ட, துருவி - ஆராய்ந்து.