பக்கம் எண் :

பக்கம் : 17

  ஒன்றனை நிறுவிப் பயிற்றும் பொறுப்பைப் பூங்கொடிபால் ஒப்படத்தனர். இப்பணி நடைபெறுங்கால் சண்டிலி என்னும் வடபுலப் பெண்ணொருத்தி இசை பயில வந்தனள். அவளும் ஆர்வத்தால் அத்துறையில் மேம்பாடடைந்தனள். அவள் முன்பொருகால் தென்னாட்டு மலைவளம் காணவந்து, பொதிகையில் கணவனோடு தங்கியிருந்தனள். அங்கே இசைச்செல்வி ஒருத்தியின் தேவார இசைகேட்டு மயங்கித் தமிழ் இசையை வேட்டுத் தனக்கு அவ்விசையைப் பயிற்றுமாறு வேண்டினள். அவ்விசைச் செல்வி பூங்கொடியிடம் செல்க என ஆற்றுப்படுத்த இ்ங்கு வந்து சேர்ந்தனள். பயின்று முடித்த சண்டிலி வேங்கை நகர்க்கு வருமாறு பூங்கொடியை வேண்டினள். இவளும் இசைந்து அடிகளிடம் ஒப்புதல் பெற்று, வடபுலம் சென்று இசைப்பணி புரிந்தனள்.  
          மணவாழ்வு வெறுத்த பூங்கொடியை நினைந்து வருந்திய வஞ்சி, கோமகனை அடைந்து, அவனைத் தூண்டி, அவனுக்கு மீண்டும் காம உணர்ச்சியை உண்டாக்கி அவனை வேங்கை நகர்க்கு அனுப்பினாள். அவன் இசை பயில்வான் போன்று, பூங்கொடிபாற் சென்று தன் உள்ளக்குறிப்பைப் புலப்படுத்தினன். அவள் அறவே வெறுத்துக் கூறி அனுப்பிவிட்டாள். தோல்விகண்ட கோமகன் எவ்வாறேனும் இவளை அடைவதாக வஞ்சினம் கூறிச் சென்றான். அந்நகரில் இசையில் பெரு விருப்பங்கொண்ட பெருநிலக்கிழார் என்பவர் பூங்கொடியைப் பற்றிக் கேள்வியுற்று அவளுக்கு அழைப்பு விடுத்தனர். அவளும் தனித்து இங்குவந்து பலவகை இசையும் பாடி மகிழ்வித்தனள். மகிழ்ந்த அவர், ஆடலிலும் பாடலிலும் சிறந்திருந்து இறந்துபோன தன் மகளைப் போலவே விளங்கும் இவளையும் மகளாகவே கருதிப் பூங்கொடிக்கு உதவ நினைத்தனர். அதன்படி பூங்கொடியின் வேண்டுதலால் மிகப்பெரிய நூலகம் ஒன்று நிறுவ இசைந்தனர்.  
          இசைபயிலும் சண்டிலியைக் காண வந்திருந்த அவள் கணவன் துருவன், அம்மாளிகையின் ஒருபால் தங்கியிருந்தனன். அந்நள்ளிரவில் கோமகன் பூங்கொடியின்