பக்கம் எண் :

பக்கம் : 189

25. கிழார்திறம் அறிந்த காதை

 
 

நிலக்கிழார் பூங்கொடியை வேண்டல்

 
     
  பழியும் சிறையும் நீங்கிய பாவையை
வழியெதிர் நின்று வரவுரை கூறிக்
கழிபே ருவகைக் களிப்பொடு நிலக்கிழார்
தம்முயர் மாமனைக் கம்மகள் தன்னையும்

 
  உடன்கொண் டேகி `என்றுமென் னகத்தில் 5
  இடனுண் டாதலின் ஈண்டுநீ உறைக!'
என்னுங் கனிமொழிக் கியைந்தன ளாகி
மின்னும் பிறைநிகர் நன்னுதல் அரிவை,
 
     
 

பூங்கொடி நன்றிமொழி

 
     
  `ஐயநின் னன்புக்கு யாதுகைம் மாறு  
  செய்வதென் றறியேன், திகைப்புறு கின்றேன்; 10
  முனம்நினை யறியேன் எனினும் உன்பால்
இனம்அறி யாவணம் எழுந்ததோ ரன்பு
தழைத்ததென் னுளத்தே; தந்தையின் உறவை
விளைத்ததித் தொடர்பு வீய்ந்தஎன் றந்தை
 
  இல்லாக் குறையை இல்லா தொழித்தனை; 15
  நில்லாப் பழியால் நெடுஞ்சிறை புக்குப்
பொல்லாத் துயராற் பொன்றுங் காலை
நடுக்குற்ற நின்மனம் நன்குயான் அறிகுவல்;
இடுக்கண் களைய எடுத்தநன் முயற்சியும்
 
  தெற்றென உணர்குவென்; சிறுமகள் எனக்குநீ 20
  உற்றுழி உதவிய ஒருபெருங் கருணைக்கு
நாளும் நாளும் நன்றியறி வுடையேன்;
வாழும் பொழுதெலாம் வணங்குத லன்றி
ஏழை யாதுநான் இயம்புவல் ஐய!'
 

---------------------------------------------------------------

  பொன்றுங்காலை - அழியும்போது, தெற்றென - தெளிவாக.