| துவண்டனள் பூங்கொடி | |
| | |
| ஒருத்தியின் நல்லுடல் உருக்குலைந் திருந்தது; சிரித்தசெவ் வாயிதழ் விளர்த்துக் கிடந்தது; செந்தமிழ் பேசிச் சிவந்தஅவ் வாய்தான் அந்தம் இழந்து நொந்து கிடந்தது; | |
| குழலோ யாழோ குரலோ என்னும் | 80 |
| அழகிய இசைதரும் மிடறெழில் சிதைந்தது; குழலின் காடு குலைந்து பறந்தது; பிறையினைப் பழித்துப் பேசிய நுதலெழில் குறைந்ததோ மறைந்ததோ கூறுவ தறிகிலேம்; | |
| குவளைக் கண்கள் கூர்மை யிழந்தன; | 85 |
| தவழும் அருளொளி இருளில் தணிந்தது; படர்ந்த பூங்கொடி பரிதியின் கொடுமை தொடர்ந்து தாக்குறத் துவண்டது போல மடந்தை உடலம் நுடங்கிக் கிடந்தது; | |
|
ஆள்வோர் ஆணை |
| | |
| மருத்துவர் பலப்பல மருந்துகள் தந்தனர்; | 90 |
| நெருப்பெனச் சுடுநோய் நெகிழ்ந்திட வில்லை; ஒருநாள் இருநாள் ஓடி மறைந்தன; மறுநாள் வெப்பம் சிறிதே தணிந்தது; தணிந்து தணிந்து தண்ண்ணெனக் குளிர்ந்தது; | |
| முனிந்து சிறையுள் மூடிய அரசு | 95 |
| கனிந்துளம் நெகிழ்ந்து கடுநோ யுற்ற பூங்கொடி தன்னைப் பூட்டிய சிறையகம் வாங்குக என்னை வழங்கிய தாணை; | |
| | |
| தமிழணங்கின் தோற்றம் | |
| | |
| அவ்விடை எவரோ ஆயிழை தன்பாற் | |
| செவ்விதிற் சிலசொல் செப்புதல் போலச் | 100 |
| செவியிற் படலால் செந்தமிழ்ச் செல்வி குவியிமை திறந்து கூர்ந்து நோக்கினள்; காலிற் சிலம்பும் கையில் வளையும் நூலிற் சிறிய நுண்ணிடை தன்னில் | |
--------------------------------------------------------------- |
| அந்தம் - அழகு, மிடறு - கழுத்து. | |
| | |