பக்கம் எண் :

பக்கம் :80பூங்கொடி

  செயல்படல் இன்றிச் சிதைந்தது நூலகம்;
வீடுகள் தோறும் ஏடுகள் தேடிப்
பாடுகள் உறும்யான் பயன்தரும் எனநினைந்
தோடினென் ஆங்கே தேடினென் ஏடுகள்;
 
 

சிதைந்த சுவடிகள்

 
  தென்மொழி வடமொழி தெலுங்கு முதலாப் 75
  பன்மொழி ஏடுகள் பற்பல கண்டேன்,
ஓவியம் சிற்பம் மருத்துவம் ஒண்டமிழ்ப்
பாவினில் உரைக்கும் ஏடுகள் கண்டேன்,
வானநூல் ஏடும் வகைவகை கண்டேன்,
 
  ஊனம் இலாத தொன்றும் இல்லை; 80
  முதலும் முடிவும் காணாச் சுவடிகள்,
சிதலும் மண்ணும் சிதைத்த சுவடிகள்
கண்டேன் கண்டேன் கலங்கினென் உள்ளம்;
 
 

எரிந்த ஏடுகள்

 
  அண்டையில் நின்ற அந்நூல் நிலையப்  
  பணியாள் தன்பாற் பரிந்து வினவினென், 85
  இன்னும் உளவோ ஏடுகள் என்னவும்
`அன்னாய்! ஏடுபல் லாயிரம் இருந்தன,
வெந்நீர் வேண்டி விறகென அவற்றை
எரித்தோம்' என்றனன்; துடித்ததென் மனனே;
 
  எரித்தஅவ் வேடுகள் எத்தகு நூலோ! 90
  கலைமகள் தமிழைக் காப்பதிப் படியோ!
கொலைமிகு நெஞ்சர் கொடுமைதான் என்னே!
வெந்நீர் பாய்ச்சி, மிகுபயன் நல்கும்
கன்னல் தமிழ்ப்பயிர் கருகிட முனைந்தனர்;
 
  என்னே! என்னே! இவர்தம் மதிதான்! 95
  மடமை என்கோ? கொடுமை என்கோ?  

---------------------------------------------------------------

  பாடுகள் - துன்பங்கள், ஊனம் - குறை.