பக்கம் எண் :

பக்கம் :88பூங்கொடி

  மீண்டுந் தமிழிசை வேண்டும் எனினோ
மொழிவெறுப் புணர்ச்சி என்றதை மொழிகுவர்;
பழுதுறு மதியர் பான்மையஃ தன்றோ?
அகப்பகை தமிழை அழிப்பதைக் காணுதி!
 
  செகுத்ததை ஒழித்துச் செந்தமிழ் பேணுதி! 100
     
 

தொண்டர்க்கு வேண்டுவன

 
     
  தொண்டுபூண் டார்க்குத் தூயநல் லுளனும்,
கண்டவர் பழிப்பாற் கலங்கா உரனும்,
துயரெது வரினும் துளங்கா நிலையும்,
அயரா உழைப்பும், ஆயும் அறிவும்,
 
  தந்நல மறுப்பும், தகவும் வேண்டும் 105
  இந்நல மெல்லாம் ஏற்றொளிர் நீயே;  
     
 

இருளும் தொண்டும்

 
     
  விளக்கிடை நின்றான் வீங்கிருள் புகுவோன்
துளக்கம் கொள்வான்; துணைவிழிப் புலனும்
ஒளியிழந் தொருபொருள் உணரா திருக்கும்;
 
  கழியிருள் அதனுள் கடந்தனன் செல்லின் 110
  வழியதும் புலனாம் ஒளியுங் காணுவான்;
பொதுநலம் புரிவோர் நிலையதும் இதுவே;
முதன்முதற் புகுவோர்க்கு மலைப்பே முந்துறும்,
மலைப்பும் இளைப்பும் மதியா ராகி
 
  உழைப்போர், வருதுயர் ஒன்றுங் காணார்; 115
  அரிதாய் மலைப்பாய்த் தோன்றிய அப்பணி
சிறிதாய் எளிதாய்ச் செயற்படும்; அதனால்
என்மொழி யாவும் ஏற்றுளம் பதித்துத்
தென்மொழி உயரத் தேன்மொழி, தொண்டுசெய்!
 
     
 

இசைப்பணிக்கு எழுக எனல்

 
     
  இசைத்தமிழ் முழக்குக எங்கணும் பெரிதே! 120

---------------------------------------------------------------

  கழியிருள் - மிகுந்த இருள், தேன்மொழி - பூங்கொடி.