பக்கம் எண் :

மனோன்மணீயம்
23

முதல் அங்கம்

4-ம் களம்

இடம் : கன்னிமாடம். காலம் : மாலை.

மனோன்மணி சயனத்திருக்க ஜீவகன், வாணி, செவிலி சுற்றி நிற்க.

(நேரிசை யாசிரியப்பா)


ஜீவகன்.உன்னன் பிதுவோ? என்னுயி ரமிர்தே !
உனக்குறு துயர மெனக்குரை யாததென்?
விரும்பிய தென்னென் றுரைக்கில் விசும்பில்
அரும்பிய அம்புலி யாயினுங் கொணர்வன்.
5.வருத்துவ தென்னென வழங்கின் மாய்ப்பன்
உறுத்துங் கூற்றுவ னாயினு மொறுத்தே.
தாய்க்கு மொளித்த சூலோ? தையால் !
வாய்க்கு மொளித்த வுணவோ? மங்காய் !
ஏதாயினு மெனக் கோதா துளதோ?
10.பளிங்கும் பழித்த நெஞ்சாய் ! உனக்கும்
களங்கம் வந்த காரண மெதுவோ?
பஞ்ச வனக்கிளி செஞ்சொல் மிழற்றி
இசையது விரித்தோர் பிசித மரமேல்
இருந்து பாடு மெல்லை, ஓர் வானவன்,
15.திருந்திய இன்னிசை யமுதிற் செப்பிப்
போயது கண்டு, சேயதோர் போந்தையில்
தனியே பறந்து போய்த் தங்கி, அங்கவன்
பாடிய இசையே கூவிட வுன்னி
நாடி நாடிப் படியும் வராது,
20.வாடி வாயது முடி, மௌனமாய்
வருந்தி யிருந்ததாய்க் கண்ட கனாவும்
நேற்றன் றோஎனக் கியம்பினை ! நெஞ்சில்
தோற்றிய தெல்லா மிங்ஙனஞ் சொல்லும்
பேதாய் ! இன்றெனக் கென்னோ
25.ஓதா யுன்ற னுளமுறு துயரே?1