பக்கம் எண் :

மனோன்மணீயம்
62

மூன்றாம் அங்கம்

1 - வது களம்

இடம் : பாண்டியன் அரண்மனை. காலம் : காலை.

ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை.
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஜீவகன்.ஐயமென்? அருஞ்சூழ் அமைச்ச ! நின்தனையன்
பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக்
குரியன முற்று மொருங்கே முடித்து
வருவதற் கமைந்த வலிமையுங் கல்வியும்
5.உபாயமும் யாவு முடையான் ; அதனால்
அபாயங் கருதிநீ யையுறல் வீண் ! வீண் !

குடிலன்,பலதேவ னாலொரு பழுதுறு மெனவெனக்
கிலையிலை யையஞ் சிறிதும். உலகத்து
இயற்கை யறியா இளையோ னாகிலும்
10.முயற்சியின் மதியின் முதியோ னெனவே
மொழிகுவர். அவனாற் பழுதிலை. கொற்றவ !
வஞ்சிநாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார்.
நஞ்சினுங் கொடிய நெஞ்சினர், அவர்தாங்
கெஞ்சிடின் மிஞ்சுவர் : மிஞ்சிடிற் கெஞ்சுவர் :
15.என்னுந் தொன்மொழி யொன்றுண் டதனால்
மன்னவ ! சற்றே மருளுமென் னுளம்.
அன்றியும் புருடோத் தமனெனு மரசன்
கன்றுஞ் சினத்தோ னென்றார் பலரும்.

ஜீவ,சினத்தோ னாயினென்? தேவருந் தத்தம்
20.மனத்தே யவாவி மயங்குநம் மனோன்மணி
திருவும் வெருவு முருவும், பெருகும்
அருளுறை யகமும், மருளறு முணர்வும்,
முன்னமே யிருடிகள் மொழியக் கேட்டுளன்.
அன்னவன் தன்னிடைப் பின்னரும் பெயர்த்துக்
25.குறிப்பால் நமது கொள்கை யுணர்த்தில்,
செறித்திடுஞ் சிறையினை யுடைத்திடும்புனல்போல்