பக்கம் எண் :

மனோன்மணீயம்
78

சாரும்வரை குறியாது தன்னிழலை யளக்குந்

தன்மையென நான்நடக்கத் தான்வளரும் அடவி,

ஆரிருளி லினிநடக்க ஆவதிலை. உடலம்

மாறும்வகை வீடுளதே லடையுநெறி யருளாய்.”

2


என்றமொழி கேட்டமுனி யெதிர்விடையங் கியம்பும் :-

“ஏகாந்தப் பெருங்ககனம் ; இதிலுலக ரணையார் ;

சென்றுறைய மடமுமிலை ; திகழ்வெளியென் வீடு ;

சிந்தையற நொந்தவர்க்குச் சேரவிலை பந்தம்.

3


அறங்கிடந்த சிந்தையரா யாசையெலாந் துறந்த

அதிவீர ரொழியஎவ ராயினுமிங் கடையார்.

உறங்கவவர் பணிப்பாயும் பூவணையும் உன்னா

ருண்ணவெனிற் பாலமிழ்து மொன்றாக மதியார்.

4


ஆகலிலென் பாலுறுவது யாதெனினு மைந்த !

அன்புடன்நீ யென்பிறகே யணையிலஃ துனதாம்.

வேதனையும் மெய்ச்சலிப்பும் விட்டகல இருளும்

விடியும்..உடன் மனமிருக்கில் வேண்டுமிடம் ஏகாய்.”

5


என்றுரைத்த இனியமொழி யிருசெவியுங் குளிர,

ஏதோதன் பழநினைவும் எழவிருகண் பனித்து

நன்றெனவே தவவடிவாய் நின்றமகன் வணங்கா

நன்முனிவன் செல்வழியே நடந்துநனி தொடர்ந்தான்.

6


இந்திரநற் சாலவித்தை யெதுவோவொன் றிழைக்க

இட்டதிரை யெனத்திசைக ளெட்டுமிருள் விரிய

அந்தரத்தே கண்சிமிட்டிச் சுந்தரதா ரகைகள்

அரியரக சியந்தமக்குள் ளறைந்துநகை புரிய ;

7


என்புருகப் பிணைந்த அன்றில் இணைசிறிது பிரிய

ஏங்கியுயிர் விடுப்பவர்போ லிடையிடையே கூவ,

அன்புநிலை யாரறிவ ரென்பனபோல் மரங்கள்

அலர்மலர்க்கண் நீரருவி அகமுடைந்து தூவ ;

8


விந்தைநடப் பதுதெரிக்க விளிப்பவரில் வாவல்

விரைந்தலைய மின்மினியும் விளக்கொடுபின் ஆட ;

இந்தவகை அந்தியைமுன் ஏவிஇர வென்னும்

இறைவியும்வந் திறுத்தனள்மற் றினைஞருயிர் வாட.

9