பக்கம் எண் :

மனோன்மணீயம்
88

மூன்றாம் அங்கம்
4 - வது களம்

இடம் : சுந்தரமுனிவர் ஆசிரமம். காலம் : வைகறை.
நிஷ்டாபரர் கருணாகரர் இருவரும் அளவளாவி இருக்க.

(நேரிசை ஆசிரியப்பா)

நிஷ்டாபரர்.ஏதிஃ துமக்குமோ இத்தனை மயக்கம் !
வேத வேதாந்தம் ஓதிநீர் தெளிந்தும்
இரவெலா மிப்படி யிமையிமை யாதே
பரிதபித் திருந்தீர்! கருணா கரரே !
5.பாரினிற் புதிதோ போரெனப் புகல்வது !
போரிலை யாயினென்? யாருறார் மரணம்?
எத்தின முலகி லெமன்வரா நற்றினம்?
இத்தின மிறந்தோ ரெத்தனை யென்பீர்?
ஒவ்வொரு தினமு மிவ்வன மொன்றில்,
10.எறும்பு முதலா எண்ணிலா உயிர்கள்
உறுந்துயர் கணக்கிட் டுரைப்போர் யாவர்?
சற்றிதோ மனங்கொடுத் துற்றுநீர் பாரும்.
குரூரக் கூற்றின் விரூபமிச் சிலந்தி !
பல்குழி நிறைந்த பசையறு தன்முகத்து
15.அல்குடி யிருக்க, அருளிலாக் குண்டுகண்
தீயெழத் திரித்துப் பேழ்வாய் திறந்து
கருக்கொளுஞ் சினைஈ வெருக்கொளக் கௌவி
விரித்தெண் திசையிலும் நிறுத்திய கரங்களின்
முன்னிரு கையில் வெந்நுறக் கிடத்தி,
20.மார்பொடு வயிறுஞ் சோர்வுறக் கடித்துப்
பறித்திழுத் திசித்துக் கறிக்கமற் றவ்ஈ
நொந்துநொந் தந்தோ ! சிந்தனை மயங்கி
யெய்யா தையோ ! என்றழு குரலிங்கு
யார்கேட் கின்றார்? யார்காக் கின்றார்?
25.கைகால் மிகில்நம் மெய்வே றாமோ?