பக்கம் எண் :

மனோன்மணீயம்
92

காமமா திகளுடன் கடும்போர் விளைக்க
ஏவிய தார்கொல்? இடைவிடா தவைகள்
மேவிய காலை மெலிந்துகை யறுநம்

130.ஆவியுள் தைரிய மளித்தவர் யார்கொல்?
சுந்தரர் கருணையோ நந்திற மோவிவை?
உளமெனப் படுவதோ அளவிலாப் பெருவெளி :
கோட்டையு மில்லை, பூட்டுதா ழதற்கிலை :
நஞ்சே யனைய பஞ்சேந் திரியம்,

135.அஞ்சோ வாயில்? ஆயிரம் : ஆயிரம் :
அரைநொடி யதனுள் நரகென நம்முளம்
மாற்றிடக் கணந்தொறும் வருந்தீ நினைவே
சாற்றிடக் கணிதசங் கேதமே யிலை.
இப்பெரும் விபத்தி லெப்படிப் பிழைப்பீர்?

140.அருளா தரவால் யாதோ இங்ஙனம்
இருள்தீர்ந் திருந்தீர் : இலையெனில் நிலையெது?
விட்டதுந் தொட்டதும் வெளிப்பட லின்றி
நிட்டையும் நீருங் கெட்டலைந் திடுவீர் !
கட்டம் ! கட்டம் கரதலா மலகமாய்க்

145.கண்டுமோ அருளிற் கொண்டீ ரையம் !
“யார்கேட் கின்றார்? யார்காக் கின்றார்?”
என்றீர் நன்றாய். நண்பரே ! நம்நிலை
கண்டுள மிரங்கிக் காத்தருள் புரிந்து
தொண்டுகொண் டாண்ட சுந்தரன் கருணை

150.நமக்கென உரித்தோ? நானா வுயிர்கள்
எவர்க்கும் அதுபொது வன்றோ? இயம்பீர்.
எங்கிலை யவனருள்? எல்லையி லண்டந்
தங்குவ தனைத்து மவனருட் சார்பில்
அண்டகோ டிகளிங் கொன்றோ டொன்று

155.விண்டிடா வண்ணம் வீக்கிய பாசம்,
அறியி லருளலாற் பிறிதெதுஆ கருஷணம்?
ஒன்றோ டொன்றியாப் புற்றுய ரன்பில்
நின்றஇவ் வுலகம், நிகழ்த்திய கருணை
பயிற்றிடு பள்ளியே யன்றிப் பயனறக்

160.குயிற்றிய பொல்லாக் கொடியயந் திரமோ?