பக்கம் எண் :

மனோன்மணீயம்
95

என்றுநா னெண்ணி யெங்குரு நாதன்

230.திருமொழி மறுத்தென் சிற்றறி வினையே
பெரிதெனக் கருதலோ, அலதவர் பேணிய
இவ்வழி நம்மதிக் கெட்டா விடினுஞ்
செவ்வி திதுவெனத் தெளிதலோ தகுதி?
இப்படி யேயாம் இவ்வுல கின்நிலை.

235.அற்பமு மதிலிலை ஐயம். நமதுமற்று
எய்ப்பினில் வைப்பா யிருந்தபே ரருளைக்
கைப்படு கனியெனக் கண்டபின், உலகில்
எப்பொரு ளையுமிப் படியே யிவ்வருள்
தாங்கிடு மென்பதிற் சமுசய மென்னை?

240.இல்லா மாயை யென்செய வல்லதாம்?
எல்லா மவனரு ளல்லா தில்லை.
என்னநு பவமிது. மன்னிய இவ்வருள்
தன்னிடை மூழ்கித் தானெனல் மறந்து,
நெருப்பிடை யிழுதென நெக்குநெக் குருகி

 

245.இருப்பவர் பிறர்க்கா யிராப்பக லுழைப்பர்.
ஒருபயன் கருதார். அருள்கரு துவதென்?
அகிலமுந் தாங்கு மருளிலோ ரங்கமாச்
சகலமுஞ் செய்வர். அஃதவர் சமாதி.
எங்கெலாந் துக்கங் காணினும் அங்கெலாம்

250.அங்கங் கரையநின் றாற்றி “ஐயோ !
எம்மையுங் காத்த இன்னரு ளிவரையுஞ்
செம்மையிற் காக்க” எனமொழி குளறி
அழுதுவேண் டுவதே யன்றி
விழுமிய முத்தியும் வேண்டார் தமக்கே.

2

(சுந்தர முனிவரும் நடராஜரும் வர : கருணாகரர்,நிஷ்டாபரர் இருவரும் எழுந்து வணங்க)


சுந்தர,255.எல்லாம் நடேசரே ! உமதுபே ரருளே !
அல்லா தென்னா லாகுமோ? சுருங்கை
இத்தின மெப்படி முடியும்நீ ரிலரேல்?
எத்தனை கருணை? என்னைகைம் மாறு?

நட,நல்லது ! நல்லது ! சொல்லிய முகமன் !