பக்கம் எண் :

மனோன்மணீயம்
107

நான்காம் அங்கம்

2-வது களம்.

இடம் : கோட்டைவாசல். காலம் : காலை.

நடர் : கோட்டைகாக்கும் படைஞர்

(நேரிசை ஆசிரியப்பா)

முதற்படைஞன்.இப்படை தோற்கி னெப்படை ஜயிக்கும்?
எப்படி யிருந்த திராஜன் பேச்சு !
கல்லு முருகிக் கண்ணீர் விடும்.இப்
புல்லுங் கேட்கிற் புறப்படும் போர்க்கு.
2-ம் படை.5.முற்றுங் கேட்டைகொல்?

முதற்படை,

முற்றுங் கேட்டேன்.

சற்றும் மனமிலை திரும்புதற் கெனக்கு.
சரியல வாணையில் தவறுத லென்றே,
வெருவிநான் மீண்டேன். இலையே லுடன்சென்
றொருகை பார்ப்பேன். ஓகோ ! சும்மா
10.விடுவனோ? பார்க்கலாம் விளையாட் டப்போது.
என்செய ! என்செய ! எத்தனை பேரையான்
பஞ்சாய்ப் பறத்துவன் ! துரத்துவன் ! பாண்டியில்
வஞ்சவிவ் வஞ்சிய ரென்செய வந்தார்?
நெஞ்சகம் பிளந்திந் நெடுவாள் தனக்குக்
15.கொஞ்சமோ ஊட்டுவன் குருதி ! என்செய !
நினைதொறு முடலெலாந் தின்பது தினவே !
பாக்கிய மில்லையென் கைக்கும் வாட்கும் !

2-ம் படை.பாக்கிய மன்றது. பறைப்பயல் பாவி
குடிலனோ டுலாவுங் கோணவாய்க் கொடியன்,

20.சடையன், தலைவனோ டெதுவோ சாற்றித்
தடுத்தே நமையெலாம் விடுத்தா னிப்பால்.

3-ம் படை.கெடுத்தா னவனே யென்னையும். அன்றேல்
முடித்தே விடுவனென் சபதம் முற்றும்.