பக்கம் எண் :

மனோன்மணீயம்
108

சண்டிஅச் சங்கரன் வந்துளான் சமர்க்கு
25.கண்டேன். கையிற் கிடைக்கிற் பண்டென்
தாயையு மென்னையுஞ் சந்தையிற் பழித்த
வாயினை வகிர்ந்து மார்பினைப் பிளந்து -

(வாய்மடித்துப் பற்கடிக்க)


4-ம் படை.

வஞ்சிய ரனைவரு மானமில் மாக்கள்.
பிஞ்சிற் பழுத்த பேச்சினர், யானெலாம்

30.

நன்றா யறிவன். ஒன்றோ ரென்னுடன்.
சென்றுளேன் ஜனார்த்தனம்.கண்டுளேன் வைக்கம்.


3-ம் படை.

விடுவே னல்லேன். அடுபோர் முடியினும்
நடுநிசி யாயினும் அடுகள முழுதுந்
தேடுவன் : சங்கரன் செத்தா னாயினும்

35.

நாடி யவன்றலை நசுக்கி மிதித்து
வாயிடை நெடுவே லிறக்கி -


முதற்படை. 

சீ ! சீ !

சேவக னாநீ ! செப்பிய தென்னை !
யாவரே பிணத்தோ டாண்மைபா ராட்டுவர்?
பிணமோ பிணத்தோ டெதிர்க்க !


3-ம் படை, 

போ ! போ !

40.

பெருமைநீ பேசேல். பெற்றவுன் தாயேல்
அருமைநீ யறிகுவை.


முதற்படை,

யாரா யினுமென்?

பிணத்தொடு பிணக்கெது? சீ ! சீ ! அன்றியும்
ஒருவன் தனக்கா உண்டாங் குரோதங்
கருதியிங் கெவன்வா ளுருவினன்? நமக்கெலாம்

45.

மாதா விவ்வயின் மகாநா டிதுவே.
ஏதோ அவளையு நம்மையு மிகழ்ந்திவ்
வஞ்சியர் வஞ்சமாய் வந்தனர். அதனால்
நெஞ்சகங் கொதித்து நெடியநஞ் சுதந்தரந்
தனக்கா யுயிரையு முவப்போ டளிக்கத்

50.

துணிந்தே நம்மையு மறந்தே நின்றோம்,
என்னி லவரவ ரிழுக்குஆர் கருதுவர்?