| வைத்துத் தடைப்படுத்தக் கூடாது. இப்படிப்பட்ட தனியுரிமைகள் ஒவ்வொருவருக்கும் வேண்டும். இன்று உள்ள அமைப்பில் இந்த உரிமைகள் இல்லை என்பதை மறக்கக் கூடாது. நூற்றுக்குத் தொண்ணூறு பேர் வெறுப் போடும் சலிப்போடும் தாம் விரும்பாத துறையில் தொழில் செய்து வருகின்றார்கள்; அறியாமையால் முதலில் ஆராயாமல் தேர்ந்தெடுத்துக் கொண்ட தொழிலை மாற்றிக்கொள்ள உரிமை இல்லாமல் வருந்துகிறார்கள். ஆகையால் இன்றைய அமைப்பில் தனி வளர்ச்சிக்கு வேண்டிய வாய்ப்பு இருப்பதாக எண்ணி ஏமாற்றமடையக் கூடாது. இன்று தனி வளர்ச்சிக்கு வாய்ப்பு இருக்கின்றது என்றால், அது யாரோ சிலர்க்கு மேன்மேலும் செல்வமும் புகழும் தேட உரிமையும் நலமும் இருக்கின்றது என்று பொருள்; மற்றவர்களுக்கு மேன்மேலும் வறுமையும் சிறுமையும் அடைந்து தாழ்ந்து போவதற்கு உரிமை இருக்கிறது என்று பொருள். மிகச் சிலராகிய அவர்களுக்கும் போலி நாகரிகமும் சமுதாய அமைப்பும் எவ்வளவோ கட்டுப்பாடுகளை விதித்து அடக்குகின்றன; உண்மையை ஆராய்ந்தால் அவர்களும் தனி வளர்ச்சி இல்லாமல் திண்டாடி வருந்துகின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். மற்றவர்களைப் பற்றி ஆராய வேண்டியதில்லை. களர் நிலத்தில் விளையும் நெருஞ்சி போல் பிறந்து வளர்ந்து மடிகின்றார்கள்; எல்லோர்க்கும் ஒரு வகையான வறுமை; ஒரு வகையான சிறுமை; ஒரே வகையான புறக்கணிப்பு; ஒரே வகையான கவலை. ஆகையால் குடும்ப வாழ்க்கையிலும் உலக வாழ்க்கையிலும் இன்று இருப்பதாகக் கூறப்படும் தனியுரிமையும் நலமும் போலியானவைகளே என்பதை மறக்கக் கூடாது. உலக வளர்ச்சி அறநெறியில் அமையும் அமைப்பில், காதல் |