| நடை என்கிறோம். இவ்வாறு கூறும் பண்புகள் எல்லாம் அவரவர்களின் உள்ளப் பண்புகளே என்பது கண்டோம். சிலர் பலவற்றைத் தொகுத்துச் சிந்திக்கும் பழக்கம் மிகுந்தவர். அவரவர்கள் எழுதும் வாக்கியங்களில் இந்தப் பண்புகள் புலனாகும். சிலர் நடையில் நீண்ட வாக்கியங்கள் மிக்கிருப்பதற்கும் சிலர் நடையில் சிறுசிறு வாக்கியங்கள் இருப்பதற்கும் காரணம் மனப்பான்மையே ஆகும்.சிலர் எழுத்தில் தெளிவின்மையும், வேறு சிலருடைய எழுத்தில் பளிங்கு போன்ற தெளிவும் காணப்படும். இவ் வேறுபாட்டுக்குக் காரணம், அவரவர்களின் சிந்தனையின் சிக்கலிலும் குழப்பமற்ற தெளிவிலும் காணப்படும். சிலர் திட்ப நுட்பத்தில் விருப்பம் உள்ளவர்; நம்மிடம் ஏதேனும் சொல்ல வந்தால் இரண்டொரு வாக்கியங்களில் வரையறுத்துச் சொல்லி முடிப்பவர். வேறு சிலர் விரிவிலும் விளக்கத்திலும் ஆர்வம் உள்ளவர்; சொல்ல வேண்டியவற்றை மேன்மேலும் வளர்த்துப் பெருக்கிச்சொல்வர். ஆசிரியர்களின் நடையிலும் இந்த வேறுபாட்டைக் காணலாம். இவ்வாறு, நடை வெவ்வேறு ஆசிரியர்க்கு வெவ்வேறாக இருத்தல் போலவே, காலத்திற்கு ஏற்பவும் வேறுபட்டு அமைந்துள்ளமை காணலாம். அதனால்தான் பாட்டுக் கலையும் காலந்தோறும் வடிவ வேறுபாட்டுடன் விளங்கிவருகிறது எனலாம்.
|