4. வன்மையும் மென்மையும் ஆணும் பெண்ணும் ஒத்த உரிமை உடையவர்கள் என்று முன்னோர் கருதியபோது, ஒரே இடத்தில் ஒரே நிலையில் ஒத்த உரிமை உண்டு என்று கருதவில்லை. குடும்பப் பொறுப்பில் மனைவிக்கு உரிமை மிகுதி; வெளிக் கடமைகளில் கணவனுக்கு உரிமை மிகுதி. இருவரின் உரிமைகளும் செல்லும் இடங்களும் வேறே; முறைகளும் வேறே. ஒரே இடத்தில் ஒரே நிலையில் இருவர்க்கு உரிமை இருத்தல் வீண் போராட்டத்தையே வளர்க்கின்றது. ஒரே இடத்தில் இருவர் உரிமையை நாடுதல், ஒரே பக்கத்தில் இரண்டு ஓவியங்கள் ஒன்றின்மேல் ஒன்றாக வரைதல் போன்றது. இரண்டு ஓவியங்களுமே தெளிவு இழந்து வீணாகின்றன. இருவர் வெவ்வேறு இடத்தில் உரிமை பெற்று வாழ்தல், ஒரு தாளில் இப்பக்கத்தில் ஓர் ஓவியமும் அப்பக்கத்தில் மற்றோர் ஓவியமும் வரைதல் போன்றது. இதனால் அதற்கும் அதனால் இதற்கும் சிறப்பு ஏற்பட, ஓவியம் வரைந்த அந்தத் தாளுக்கு மதிப்பு மிகுதியாகிறது. முன்னோர் கண்டு அமைத்த இல்வாழ்க்கை, கணவனும் மனைவியும் அன்புடன் வாழ்ந்து, ஒருவரால் மற்றொருவர்க் |