தான் காதலன் மடலேறத் துணியும் நிலையிலும், காதலி அமைதியாகத் துயரத்தை தாங்கிக்கொண்டு வருந்துகிறாள். மடலூர்தல் என்பது ஒரு வகையில் காதலன் தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் முயற்சி ஆயினும், மற்றொரு வகையில் அவன் தன் காதலை ஊர் அறிய விளம்பரப் படுத்துவதாகும். நாற்சந்தியில் நிற்பது, காதலியின் உருவத்தை வரைந்த படத்தைக் கையில் ஏந்துவது, வருவார் போவார் பார்க்குமாறு துன்புறுவது முதலியவை எல்லாம் காதலைப் பலரும் அறியச் செய்யும் முயற்சியாக உள்ளன. ஆயின், காதலியின் நெஞ்சம் இதற்கு நேர் மாறாக எண்ணுகிறது. ஊரார் சிலர் எப்படியோ அவளுடைய காதலைப் பற்றி அறிந்து கொண்டார்கள். பிரிவுத்துயரால் வருந்துவதையும் அறிந்து கொண்டார்கள். அவர்கள் அவளைப் பார்க்கும் போது தமக்குள் சிரிக்கிறார்கள். அந்தச் சிரிப்பை அவள் எவ்வாறோ பார்த்து விடுகிறாள். பார்த்ததும், தன் நிலையைப்பற்றி ஊரார் சிரிக்கிறார்கள் என்று எண்ணி நோகிறாள். "யான் கண்ணால் காணுமாறு நகைக்கிறார்களே; இவர்கள் அறிவு இல்லாதவர்கள். நான் பட்ட துயரத்தை இவர்கள் படாத காரணம் இது" என்று நொந்து எண்ணுகிறாள். யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படாறு, (குறள், 1140) இங்கே ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பண்பு வேறுபாடு புலப்படுகிறது, தன்னால் தாங்க முடியாத துயர் உற்றபோது, ஊரார் அறிய அதை வெளிப்படுத்த விரும்புகிறது ஆணின் மனம். நாற்சந்தியில் நின்று வருவார் போவார் |