காதல் என்பது ஒரு தீ என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறாள் அவள். தீ என்றால் அழிக்கும் தன்மை உடையது; சுடும் தன்மை உடையது; வருத்துவது. ஆனால், காதலர் உடன் வாழும்போது காதல் வருத்தவில்லை; சுடவில்லை. காதலரின் பிரிவு தான் வருத்துகிறது; சுடுகிறது. ஆகையால் காதலைத் தீ என்பது பொருந்துமா என்று எண்ணுகிறாள். உடனே அவள் மனத்தில் ஒரு கருத்து எழுகிறது, மற்றத் தீ தொட்டால் சுடுவது; காதல் தீ விட்டால் சுடுவது என்கிறாள். தொடின்சுடின் அல்லது காமநோய் போல விடின்சுடல் ஆற்றுமோ தீ. (குறள், 1159) இந்த உலகத்தில் எப்படித்தான் நம்புவது? அறிவுடையவரும் விட்டுப்பிரிய எண்ணுகிறாரே! அவரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் நேரும் என்றால், எப்படி நம்புவது? நம்பித் தெளிவது அரிதுதான் என்கிறாள். அரிதுஅரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவுஓர் இடத்துஉண்மை யான். (குறள், 1153) வெளிநாட்டிற்குச் சென்றுவர முயல்கிறான் காதலன்! கடமை காரணமாகப் பிரிந்து போய்வர வேண்டியுள்ளது என்பதைத் தன் துணைவியிடம் சொல்லவும் அஞ்சுகிறான். அவளிடம் எப்படித்தான் சொல்வது என்று கலங்குகிறான், குறிப்பால் புலப்படுத்த முயல்கிறான். காதலி அதை உணர்ந்துகொள்கிறாள். "பிரிவைப் பற்றி நினைக்கவும் முடியாமல் என் உள்ளம் வருந்துகிறதே! அவர் என்னிடம் வந்து அதைப் பற்றிச் சொல்லவும் துணிவார்போல் உள்ளதே' என்று எண்ணுகிறாள். உடனே, "என்ன கல்நெஞ்சம், என்ன துணிவு! பிரிவைப்பற்றி என்னிடம் சொல்லும் துணிவும் |