12. மாலைத் துயர் காலையிலே உடல் நரம்புகள் சுறுசுறுப்புடன் இருப்பது இயற்கை; அப்போது நரம்புகள் ஒருவகை முறுக்குடன் இருக்கின்றன என்று சொல்லலாம். பகலில் உழைக்கும் உடல் உழைப்பாலும் சிந்தனை முதலிய மூளை உழைப்பாலும் நரம்புகள் சோர்வு அடைகின்றன; முறுக்கான நிலைமை மாறி நெகிழ்ந்து மென்மை அடைகின்றன; அதனால் காலையில் உள்ள இயற்கையான மனமகிழ்ச்சி மாலையில் இருப்பதில்லை. அதற்கு ஈடு செய்வதற்காகத்தான், மாலையில் நண்பர் கூட்டம், ஆடல், பாடல், தேநீர் விருந்து, உலாவல், கண்ணிற்கு இனிய காட்சி, சுவை மிகுந்த பேச்சு முதலியவற்றை வாழ்க்கையில் அமைத்து மகிழ்கிறோம். சிலர் குடித்து மயங்குவதில் ஈடுபடுவதற்குக் காரணமும் இதுதான். மாலையின் சோர்வும் துன்பமும் உணராமல் இருப்பதற்கே அவர்கள் மயக்கப் பொருளை நாடுகிறார்கள். இவ்வகையான பொழுதுபோக்கு இல்லையானால், மாலைக் காலம் ஒருவகைச் சோர்வான காலமாகவே உணரப்படும். இந்த உண்மை மற்றக் காலங்களில் தெரிவதைவிட, ஒருவருடைய வாழ்வில் துன்பம் நேரும்போது நன்றாகப் புலப்படுகிறது, தனித்திருந்து தானே அடைய வேண்டிய துயரம் |