பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டக் கால்கோல் விழா வாழ்த்துரைவாழ்த்துரை விளக்கம்173

6. தெய்வப் புலவர்
     திருவள்ளுவ மாலையில், நக்கீரர் பெயரிலுள்ள
  "தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளால்
ஆனா அறமுதலா அந்நான்கும்-ஏனோகுக்
கூழி னுரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழியுல கென்னாற்றும் மற்று."

என்னும் பாவும், மாமூலனார் பெயரிலுள்ள

  "அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின்
திறந்தெரிந்து செப்பிய தேவை-மறந்தேயும்
வள்ளுவன் என்பானோர் பேதை அவன்வாய்ச்சொற்
கொள்ளார் அறிவுடை யார்."
 
என்னும் பாவும், கல்லாடர் பெயரிலுள்ள
  "ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின்
அன்றென்ப ஆறு சமயத்தார்-நன்றென
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி."
 
என்னும் பாவும், உருத்திரசன்ம கண்ணர் பெயரிலுள்ள
  "மணற்கிளைக்க நீரூறும் மைந்தர்கள் வாய்வைத்
துணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால்-பிணக்கிலா
வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்
காய்தொறும் ஊறும் அறிவு."
 

என்னும் பாவும், மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்கிழார் பெயரிலுள்ள

  "புலவர் திருவள் ளுவரன்றிப் பூமேல்
சிலவர் புலவரெனச் செப்பல்-நிலவு
பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்கிருள்மா லைக்கும் பெயர்."
 
என்னும் பாவும், திருவள்ளுவரின் தெய்வப் புலமையை ஒருவாறுணர்த்தும்.
7. முதற் பாவலர்
  "காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம்
பேசும் உலாவிற் பெதும்பைபுலி-ஆசு
வலவர்க்கும் வண்ணம் புலியாமற் றெல்லாப்
புலவர்க்கும் வெண்பாப் புலி."
 
என்பது, ஒளவையார் ஒருவர் பெயரிலுள்ள பழம்பாட்டு.
     பாவிற்குச் சிறந்த வெண்பாலிலுங் குறுகிய வகையான குறட்பாவில், திருவள்ளுவர் விரிந்த பொருளை யமைத்திருப்பது, அவரின் முதற்பா வன்மையைச் சிறப்பக் காட்டும்.